கருணாநிதி பாணியில் ஸ்டாலின் சாணக்கியத்தனம்.. வட இந்திய ஊடகங்களில் இதே பேச்சுதான்
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளதன் மூலமாக, மற்றொரு கருணாநிதியாக உருவெடுத்து தேசிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "ராகுல் காந்தியே வருக.. நாட்டுக்கு நல்ல ஆட்சி தருக.." என்று கூறியதோடு, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என்றும் அறிவித்தார்.
அதே மேடையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை வைத்துக்கொண்டே இதை அழுத்தம் திருத்தமாகக் கூறினார் ஸ்டாலின்.

முதல் முன்னெடுப்பு
காங்கிரஸ் கட்சியே இதுவரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழியாத நிலையில், ஸ்டாலின் முதல் முறையாக ஐஸ்கட்டியை உடைத்துள்ளார். இதன் காரணமாக, கடந்த இரு தினங்களாக தேசிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளார் ஸ்டாலின். வட இந்திய ஊடகங்களில் ஸ்டாலினின் இந்த உரை விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதன்மூலம் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, தேசிய அரசியலில் திமுகவின் பெயர் முரசறைந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

கருணாநிதி முழக்கம்
1980ஆம் ஆண்டு, அதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்திருந்த போதிலும், "நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக.." என்று முழங்கி இந்திரா காந்தி கரத்தை வலுப்படுத்தினார் கருணாநிதி. எதிர்பாராத நேரத்தில் முன்வைக்கப்பட்டாலும் இதுவரை இந்திய அரசியல் கண்ட முக்கிய முழக்கமாக அது பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் முழக்கம்
2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையை ஏற்பது குறித்து, அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தபோது, சோனியாவுக்கு ஆதரவாக முதல் குரல் எழுப்பியவர் கருணாநிதி. "இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க.." என்று அப்போது கூறினார். கருணாநிதி இதை குறிப்பிட்டு காட்டி தான், "ராகுல் காந்தியே வருக.. நாட்டுக்கு நல்லாட்சி தருக.." என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

கருணாநிதி சாணக்கியத்தன்மை
கருணாநிதி அந்தந்த காலங்களில் முன்மொழிந்தவை எப்படி முதன்மையானதோ அது போலத்தான் இப்போதும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது, ஒரு கூட்டணி கட்சியின் முதல் முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கருணாநிதியின் அரசியல் சாணக்கியத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கருணாநிதி வியூகம்
எப்போதுமே கருணாநிதி பற்றி ஒன்று சொல்வார்கள். "கருணாநிதியை ஏற்பவர்கள், ஏற்காதவர்கள் இருக்க முடியும். ஆனால் அவரை தவிர்க்க முடியாது" என்று. எந்த ஒரு செய்தியின் மையப்புள்ளியாகவும், விவகாரமும் தன்னை சுற்றியே நடக்க வேண்டும் என்று வியூகம் வகுத்து செயல்பட்டவர் கருணாநிதி. எனவேதான் அவர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்திகள் அவரை சுற்றி இருக்கும். அல்லது செய்திகளை அவரே உருவாக்குவார்.

சாணக்கியத்தனம்
ஸ்டாலினின், ராகுல் காந்தி குறித்த அறிவிப்பும் அதுபோன்ற நோக்கத்திலான அரசியலாகவே பார்க்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி இதை ஏற்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. எனவே கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கும். இதை ராகுல் காந்தி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதில்தான் அவரது அரசியல் சாணக்கியத்தனம் தெரியப்போகிறது. ஆனால் ராகுல் காந்தியை, பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம், தேசிய அரசியலில் கருணாநிதி விட்டுச்சென்ற இடத்தை பிடித்து, ஸ்டாலின் தனது அரசியல் சாணக்கியத்தனத்தை நிரூபித்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.












Click it and Unblock the Notifications