Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வாக்கில் கவிழ்ந்த வாஜ்பாய் அரசு.. காரணமே தெலுங்கு தேசம் சபாநாயகர் தான்! இந்த முறை என்ன ஆகும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி 3.0 அரசில் தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் பதவியை வலியுறுத்தி வருகிறது.. இந்த சபாநாயகர் பதவி ஏன் முக்கியமானது.. கடந்த காலங்களில் சபாநாயகர் பதவியால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 1999ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசு லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் தோல்வி அடைந்தது. அதுவும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சியை இழந்தார்..

Narendra Modi BJP NDA cabinet ministers Vajpayee Chandrababu naidu telugu desam

இந்த நிகழ்வு தான் இன்றளவும் சபாநாயகரின் அதிகாரத்தை உணர்த்துவதாக இருக்கிறது. தெலுங்கு தேசம் ஏன் இப்போது சபாநாயகர் பதவி கேட்டு இந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பது இதைப் படித்தால் உங்களுக்கே புரியும்.

பாஜக கூட்டணி: வாஜ்பாய் தலைவிதியைத் தீர்மானித்த அந்த ஒரு வாக்கு சபாநாயகரின் வாக்கு இல்லை.. , ஆனால் அவரது முடிவே அப்போதைய பாஜக அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், அவர்களுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைத்துள்ளனர்.

இப்போது என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் பதவியைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் விஷயம் என்னவென்றால் 1999இல் வாஜ்பாய் அரசு ஒரு வாக்கில் கவிழ்ந்த போது சபாநாயகராக இருந்தவரும் இதே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஜ்பாய்: 1998இல் நடந்த லோக்சபா தேர்தலில் 182 சீட்களில் வென்ற பாஜக அரசு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமரானார். அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். இருப்பினும், ஒரே ஆண்டில் அதாவது 1999இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது ஒடிசா காங்கிரஸ் தலைவர் கிரிதர் கமாங் அளித்த ஒரு வாக்கு ஆட்சியைக் கவிழ்க்க வழிவகுத்தது.

அத்தனை பேர் வாக்களித்த போதும் கிரிதர் கமாங் வாக்கு மட்டும் ஏன் பேசப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. ஏனென்றால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில நாட்களுக்கு முன்பு தான் ஒடிசா முதலமைச்சராக கமாங் பதவியேற்றிருந்தார். இதனால் அவரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், அவர் லோக்சபா எம்பி பதவியை அப்போது ராஜினாமா செய்யவில்லை. இதனால் அப்போது சபாநாயகராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் ஜிஎம்சி பாலயோகி அவரை வாக்களிக்க அனுமதித்தார்.

கவிழ்ந்த வாஜ்பாய் அரசு: அந்த ஒரு வாக்கே வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தது. ஒரு வேளை பாலயோகி அவரை அனுமதிக்காமல் இருந்திருந்தால் இரு தரப்பு வாக்குகளும் சரி சமமாக இருந்து இருக்கும். ஆனால், சபாநாயகர் கிரிதரை வாக்களிக்க அனுமதித்ததால் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான வாக்கு 269 - 270 என்று பதிவானது.. இதனால் ஒரே ஒரு வாக்கு வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தது.

சபாநாயகரின் வாக்கு நேரடியாக வாஜ்பாய் அரசைக் கவிழ்க்கவில்லை.. ஆனால், அவர் கிரிதரை வாக்களிக்க அனுமதி அளித்து எடுத்த முடிவே அப்போதைய எம்டிஏ அரசு கவிழக் காரணமாக அமைந்துவிட்டது. அப்போது இதேபோல கூட்டணி அரசு அமைந்த போது சந்திரபாபு நாயுடுவின் வற்புறுத்தலின் பேரிலேயே 1998ஆம் ஆண்டு லோக்சபா சபாநாயகராகத் தெலுங்கு தேசம் கட்சியின் பாலயோகி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

25 வருஷத்திற்கு பின் அதே சூழல்: இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதேபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, மீண்டும் தங்கள் கட்சிக்குச் சபாநாயகர் பதவியைக் கேட்கிறார்.

மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவருடன் 71 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அவர்களின் இலாகா விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், சபாநாயகர் யார் என்பதில் இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்பது போலவே இருக்கிறது.

சபாநாயகர் பதவி: பொதுவாகத் தனிப்பெரும்பான்மை இல்லாமல்.. இதுபோல கூட்டணி அரசு அமையும் போது சபாநாயகர் பதவி மிக மிக முக்கியமானதாக மாறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்ததால் அவர்கள் நினைத்தவர்கள் சபாநாயகராக இருந்தார்கள். ஆனால், இப்போது தெலுங்கு தேசம் (16 எம்பிக்கள்), ஜேடியு (12 எம்பிக்கள்) இருப்பது பாஜகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் "ஜிஸ்கா ஸ்பீக்கர், உஸ்கி சர்க்கார்" என்ற வாசகம் இருக்கிறது. அதாவது சபாநாயகர் யாரோ.. அவர்களின் அரசே நடக்கிறது என்பது இதன் பொருளாகும். கூட்டணி ஆட்சி அமையும் போது சபாநாயகர் பதவி எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இது மிகச் சரியாக உணர்த்துகிறது.

என்ன நடக்கும்: ஆனால், மத்திய அமைச்சரவையிலும் கூட முக்கிய துறைகளைக் கூட்டணிக் கட்சிகள் கேட்பதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், பெரும்பாலான முக்கிய துறைகளை பாஜக தனது வசமே வைத்துக் கொண்டது. எனவே, சபாநாயகர் பதவியையும் அவர்கள் தங்கள் வசமே வைத்துக் கொள்ள முயல்வார்கள் எனத் தெரிகிறது.

சபாநாயகருக்கு எப்போதும் வானளாவிய அதிகாரம் இருப்பதாகவே கருதப்படுகிறது. சபாநாயகரால் அவைக்கு வர முடியாதபட்சத்தில் துணைச் சபாநாயகர் தான் அவையை வழிநடத்துவார். அவையை வழிநடத்தும் பொறுப்பு இவர்களுக்கு இருப்பதால் இந்த பதவி ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவி மீண்டும் தெலுங்கு தேசத்திற்குக் கிடைக்குமா அல்லது இதையும் பாஜகவே தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+