பாதியாக குறைக்கப்பட்ட மோடி கான்வாய்.. மெட்ரோவில் அமைச்சர்கள்.. ரயிலில் கவர்னர்! என்ன தான் நடக்குது!
டெல்லி: வளைகுடா பதற்றம் காரணமாக இப்போது எரிபொருள் மற்றும் எல்பிஜி சப்ளைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே முன்மாதிரி நடவடிக்கையாகப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பாஜக முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றம் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய சவாலைச் சந்தித்து வருகிறது. இதனால் "மக்களே சிக்கனம் தேவை" எனப் பிரதமர் மோடி விடுத்த அழைப்பு விடுத்திருந்தார். மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் மத்திய அமைச்சர்களும் பாஜக முதல்வர்களும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

கடும் பாதிப்பு
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி கடந்த மே 11ம் தேதி சிக்கன நடவடிக்கையில் இறங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கச் சொன்ன அவர், அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் எதுவும் வாங்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கான்வாய் குறைப்பு
முதற்கட்டமாக மத்திய அரசு சார்பில் பல சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கார் அணிவகுப்பு எப்போதும் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் இப்போது அதில் 50% வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கான்வாய் வழக்கமான 10 12 கார்கள் இருக்கும். இப்போது அதற்குப் பதிலாக வெறும் 5 கார்களில் மட்டும் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் தங்கள் கான்வாயை குறைத்துள்ளார். லக்னோ மேயர் சுஷ்மா கர்க்வால் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு அரசு வாகனங்களில் ஒன்றை மீண்டும் ஒப்படைத்தும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும், தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு, அமைச்சர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தடை விதிப்பு
அவசர வேலை தவிர்த்து, மற்ற பணிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விமானங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை அனைத்துக் கூட்டத்தையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கலாச்சாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷேலார், பிரான்சில் நடக்கவிருந்த புகழ்பெற்ற 'கேன்ஸ்' திரைப்பட விழாவிற்குத் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். சுற்றுலாத் துறை அமைச்சர் சம்புராஜ் தேசாய் தனது ஐரோப்பியக் குடும்பச் சுற்றுலாவையே ரத்து செய்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கபில் மிஸ்ரா மற்றும் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் மெட்ரோ ரயிலில் அலுவலகம் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொது போக்குவரத்து
குஜராத் ஆளுநர் ஒருபடி மேலே சென்று, மாநிலத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஹெலிகாப்டரைத் தவிர்த்துவிட்டு ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். மேலும், குஜராத் பல்கலைக்கழகங்களில் வாரத்தில் ஒரு நாளை "இன்ஜின் இல்லாத நாள்" ஆக அறிவித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சைக்கிள் அல்லது மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருள் சிக்கனத்தைத் தாண்டி பிரதமர் முன்வைத்துள்ள சில முக்கிய கோரிக்கைகள்:
- தங்கம்: அடுத்த ஒரு ஆண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தள்ளிப் போடவும்.
- சுற்றுலா: வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் 'டெஸ்டினேஷன் வெடிங்' ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
- உணவு: சமையல் எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்..












Click it and Unblock the Notifications