உ.பி.அரசு கேட்டத்தில் 93% ஆக்ஸிஜன் வழங்கிய மோடி அரசு.. டெல்லிக்கு கொடுத்தது 54% தான்!
டெல்லி: மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு கேட்ட ஆக்ஸிஜனில் 93 சதவீதத்தை ஒதுக்கி உள்ளது. ஆனால் டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கேட்டதில் 54 சதவீதம் அளவிற்கே ஆக்ஸிஜனை ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், டெல்லியின் தேவையில் கேட்டதைவிட 133 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உத்தரப்பிரதேசத்தில் கேட்டதைவிட 100 சதவீதம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 பக்க பிரமாண பத்திரத்தில் எந்த மாநிலத்திற்கு எந்த அளவிற்கு ஆக்ஸிஜன் தேவை என்பது குறித்து மதிப்பீடு செய்து அதற்கு தகுந்தாற் போல் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வார் ரூம்" போட்டு கலக்கும் பினராயி.. "ஆக்சிஜன்" இருப்பு எவ்வளவு.. யாருக்கு தேவை.. அசத்தும் கேரளா!
டெல்லியின் தேவை
ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடந்த மாநில முதல்வர்களின் கூட்டங்களில், செயலில் உள்ள கொரோனா கேஸ்களின் அடிப்படையில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவைக்கான அவர்களின் கணிப்புகள் குறித்து மாநிலங்களிடம் மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் தினமும் 300 மெட்ரிக் டன் (எம்டி) ஆக்சிஜன், ஏப்ரல் 25 க்குள் 349 மெட்ரிக், ஏப்ரல் 30 க்குள் 445 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்று டெல்லி அரசு கணித்து இருந்தது. இதேபோல், ஏப்ரல் 20, 25 மற்றும் 30 க்குள் முறையே 400 மெட்ரிக் டன், 650 மெட்ரிக் டன் மற்றும் 800 மெட்ரிக் டன் தேவை என்று உத்தரப்பிரதேச அரசு கணித்திருந்தது.
குஜராத்
தமிழகத்தை பொறுத்தவரை முறையே 200, 320, 465 மெட்ரிக் டன் என்ற அளவில் (ஏப் 20, 25, 30) கணித்திருந்தது. குஜராத் 1000, 1050, 1200 மெட்ரிக் டன் என்ற அளவில் கணித்திருந்தது. ஒட்டுமொத்தமாக 4880 மெட்ரிக் டன், 5619 மெட்ரிக் டன் மற்றும் 6593 மெட்ரிக் டன் என்கிற அளவில் ஆக்ஸிஜன் மாநிலங்களுக்கு தேவை என மத்திய அரசு கணித்திருந்தது.
உத்தரப்பிரதேசம் 100 சதவீதம்
டெல்லி அரசும், உத்தரப்பிரதேச அரசும் முறையே 133 சதவீதம் மற்றும் 100 சதவீதம் என்கிற அளவில் கேட்டத்தைவிட அதிக அளவு ஆக்ஸிஜனை கோரின. இதில் டெல்லி கேட்ட அளவில் 54 சதவீதம் அளவிற்கே தரப்பட்டது. அதாவது 378 மெட்ரிக் டன் அளவிற்கே தரப்பட்டது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு கேட்டத்தில் 93 சதவீதம் மத்திய அரசு ஒதுக்கியது. அதாவது 751 மெட்ரிக் டன் அளவிற்கு ஒதுக்கியது,
ஒதுக்கீடு அதிகரிப்பு
டெல்லியின் ஆரம்ப கணிப்புகளின்படி, ஏப்ரல் 30 அன்று 445 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. அதன்படி டெல்லியின் ஒதுக்கீட்டை 490 மெட்ரிக் ஆக உயர்த்தியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.