சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்... முடிவுக்கு வந்தது சர்ச்சை
டெல்லி: சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான குழு அவரை நியமித்துள்ளது.
சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

அதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது, அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.
மேலும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்தார்., சிபிஐ இயக்குநர் பதவி என்பது முக்கியமானது என்பதால் நீண்ட நாட்களுக்கு இடைக்கால இயக்குநரை நியமிப்பது சரியாகாது. எனவே, உடனடியாக முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் தலைமையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய இருமுறை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இந் நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் டெல்லியில் மீண்டும் உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இறுதியான முடிவு எடுக்கப்பட்டு, சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.

அலோக் வர்மாவை நீக்கியதை தொடர்ந்து ரிஷிகுமார் சுக்லா, சிபிஐயின் புதிய இயக்குநராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவர் 2 ஆண்டுகள் இந்த பணியில் இருப்பார். ரிஷிகுமார் சுக்லா, மத்திய பிரதேசத்தில் டிஜிபியாக அவர் பணியாற்றியவர், 1983ம் ஆண்டு ஐபிஎஸ் பதவிக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications