மோடி அரசின் நிர்வாகம் கங்கை நதிக்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கிறது - ராகுல்காந்தி சாடல்
கங்கை மணலில் புதைக்கப்பட்டுள்ள உடல்கள் மீதான ஒவ்வொரு துணியும், மோடி அரசின் நிர்வாகம் அதே மணலில் புதைக்கப்பட்டிருக்கும் என்று கூறுவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கங்கை நதிக்கரையில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களின் மீது போர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஆடைகளும், மோடி அரசின் நிர்வாகம் அதே மணலில் புதைக்கப்பட்டிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையின் தீவிரத்திற்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் பேரை எட்டப்போகிறது. பலரது குடும்பமும் சிதைந்து போயுள்ளது.
ஏராளமான குழந்தைகளை இந்த கொரோனா அனாதைகளாக்கி இருக்கிறது. தாய் தந்தையரை இழந்தவர்கள், இருவரில் ஒருவரை இழந்தவர்கள் என ஆயிரக்கணக்கான குழந்தைகள் பேரிடரில் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

கொரோனா அவல நிலை
இந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கு மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாலும் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற அவல நிலை நிலவுகிறது. கொரோனாவால் அனாதைகளாகி இருக்கும் இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தேசத்தின் கடமை
கற்பனைக்கு எட்டாத மிகப்பெரும் இழப்பை சந்தித்திருக்கும் அவர்களுக்கு வளமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையை வழங்க வேண்டியது, ஒரு தேசமாக நமது கடமை என சோனியா காந்தி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

நதிக்கரையில் சடலங்கள்
உத்தர பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நதியில் மிதந்து வருகின்றன. அங்குள்ள நதிகளின் கரைகள் அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. மழை பெய்த உடன் சடலங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

மோடி அரசு
இந்த புகைப்படங்களை மேற்கோள் காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது என குற்றம் சாட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், கங்கை மணலில் காணப்படும் உடல்கள் மீது காணப்படும் ஒவ்வொரு ஆடைகளும், மோடி அரசின் நிர்வாகம் அதே மணலில் புதைக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறது என்று பதிவு செய்துள்ளார்.

கோவிட் இறப்புகள்
நம் நாட்டில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது பற்றியும், தினசரி கொரோனா பலி அதிகரித்து வருவதையும் வெளிப்படுத்தும் வரைபடம் ஒன்றையும் டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் நாட்டில் தடுப்பூசிகள் குறைந்து வருகின்றன. கோவிட் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசின் கொள்கை- கவனத்தை திசை திருப்புதல், பொய்யை பரப்புதல், உண்மைகளை சத்தம் போட்டு மறைப்பது என ராகுல்காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications