பரபரக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்- ஜூலை 19-ல் அனைத்து கட்சி கூட்டம்- மத்திய அரசு அழைப்பு!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்பாக வரும் 19-ந் தேதி அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இதுவரை இல்லாத பெரும் புயல் வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய பாஜக அரசு, முழு வீச்சில் பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்றும் எனவும் கூறப்படுகிறது.

பொது சிவில் சட்டம் அவசியம் என திடீரென பிரதமர் மோடி பேசியிருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக பொது சிவில் சட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அதில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போது நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்க்கும்; பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் கூட எதிர்ப்போம் என தெரிவித்திருக்கிறது.
அதேபோல டெல்லி யூனியன் பிரதேச அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் தரும் மசோதாவும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இம்மசோதாவை அரசியல் கட்சிகள் எதிர்த்தாக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாநிலமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர எதிர்த்தால்தான் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இடம் பெறும். ஆகையால் இம்மசோதாவும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுக்கிறது.
இந்த நிலையில் ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக ஜூலை 19-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்குமா? மழைக்கால கூட்டத் தொடரே ரணகளமாகத்தான் இருக்கும் என்பதால் புறக்கணிக்குமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications