சற்றுநேரத்தில் கரையை கடக்கும் டவ்தே புயல்.. மகாராஷ்டிரா,குஜராத் மாநிலங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை
டெல்லி: அதி தீவிர டவ்-தே புயல் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் குஜராத்தில் கரையைக் கட்டும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பல இடங்களில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது
அரபிக் கடலில் உருவாகியுள்ள அதி தீவிர 'டவ்தே' புயல் காரணமாகத் தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகக் குஜராத், மகாராஷ்டிரா, டாமன் மற்றும் டையூ மாநிலங்களில் இதன் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
|
எப்போது கரையை கடக்கும்
அதி தீவிர டவ்-தே புயலானது குஜராத் கடற்கரையை நோக்கி மணிக்கு 185 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயலானது இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மிகக் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
|
களத்தில் ராணுவம்
புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கக் குஜராத் மாநிலத்தில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|
அதி தீவிர மழை
டவ்-தே புயல் காரணமாகக் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் தீவிர முதல் அதிதீவிர மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இதனால் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து விழும் ஆபத்து உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
கொந்தளிப்பு
டவ்-தே புயல் கரையைக் கடக்கும்போது, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடலில் 5 மீட்டர் உயரம் வரை அலைகள் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடற்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
|
கொரோனா நோயாளிகள்
இந்தப் புயல் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்படலாம் என்பதால் கொரோனா நோயாளிகளைக் கொண்ட மருத்துவமனைகள் போதியளவு மின்சார பேக்அப்களை கொண்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் தாண்டி, எதாவது எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால், நோயாளிகளை உடனடியாக மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.












Click it and Unblock the Notifications