எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்.. இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம்!
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் தாக்குதலில் வீர மரணம் அடைந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த முரளி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

S 400 வான்வழி பாதுகாப்பு
சரியாக பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பின்றி துல்லியமாக பயங்கரவாதிகளை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்கியது. இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் கடும் அச்சமடைந்தது. இதனால் அச்சத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாள் இரவே இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்த முயற்சித்தது.
ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதல் முயற்சியினை இடைமறித்து அழித்தது. அதிநவீன S 400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியா இடைமறித்து அழித்தது. இதன்பின்னர் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா அமைதியை விரும்புகிறது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு தக்க பதிலடியை தரும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, தொடர்கிறது என்றும் கூறியிருந்தார்.
ராணுவ வீரர் வீர மரணம்
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியையும் இந்தியா முறியடித்ததால் அச்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
நேற்று மற்றும் நேற்று முன் தினம் இரவு என இரண்டு நாட்களாக பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் எல்லை மீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலின் போது ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீரர் முரளி நாயக் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றோ அல்லது நேற்று முன் தினமோ நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சொந்த ஊர் கொண்டு செல்ல ஏற்பாடு
பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர் முரளி நாயக்கின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்படும் என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சத்திய சாய் மாவட்டத்தில் உள்ள கல்லிதண்டா கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதே கிராமத்தை சேர்ந்த மேலும் இருவர் அவருடன் பணிபுரிந்து வந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எல்லையில் வீரமரணம் அடைந்த முரளி நாயக்கின் வீரத்திற்கு தலைவணங்குவதாகவும், அவரது மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு பதிலடி
நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயற்சித்ததையும் எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். மிகப்பெரிய ஊடுருவல் நடக்க இருந்ததாகவும், இதனை இந்திய எல்லை பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியதாகவும் இந்திய ராணுவம் கூறியிருந்தது. மேலும் நேற்று இரவு பாகிஸ்தான் இந்தியாவின் மீது ஏவுகணை மற்றும் விமானம் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்த முயற்சித்தபோதும் அனைத்தினையும் இந்திய வான்வழி பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
தொடர்ந்து பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சித்ததால் இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கட்ரா, அதன் அருகில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட பல இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. எனினும் இதனை இந்தியா முறியடித்தது.












Click it and Unblock the Notifications