முஸ்லீம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்யலாம்.. சட்டப்படி சரி! பஞ்சாப் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
டெல்லி: இஸ்லாமியப் பெண்களின் திருமண வயது குறித்து பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பஞ்சாபை சேர்ந்த 16 வயது முஸ்லீம் பெண் சில நாட்களுக்கு முன்னர் 21 வயது இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தார்.
இவர்களின் திருமணத்திற்குப் பெண்ணின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து அந்த தம்பதி பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

முஸ்லீம் தம்பதி
பதன்கோட்டைச் சேர்ந்த இந்த முஸ்லிம் தம்பதி, தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடியின் ஒற்றை நீதிபதி அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது 16 வயதுக்கு மேற்பட்ட முஸ்லீம் பெண் தனக்கு விருப்பமான நபரைத் திருமண செய்து கொள்வதில் தவறு இல்லை என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்கு
இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், "மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்க முடியாது" என்றார். மேலும், இஸ்லாமிய ஷரியா விதியை மேற்கோள் காட்டி நீதிபதி பேடி, முஸ்லீம் பெண்ணின் திருமணம் முஸ்லீம் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

16 வயது பெண்
மேலும் நீதிபதி கூறுகையில், "சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் முஹம்மதின் சட்டத்தின் கோட்பாடுகளின்படி, 16 வயதான இளம்பெண் ஒருவர் விரும்பும் நபரைத் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவரும் முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி திருமண வயதுடையவர்கள்.

தீர்வு
மனுதாரர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் கண்களை மூடிக்கொள்ள முடியாது" என்று நீதிபதி கூறினார். மேலும், தம்பதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கவும் பதன்கோட் எஸ்எஸ்பி அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மனுத்தாக்கல்
நீதிமன்றத்தில் அவர்களின் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருவருக்கும் கடந்த ஜூன் 8, 2022ஆம் தேதி முஸ்லீம் சடங்குகளின்படி திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், பெற்றோர் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொண்டதால் இரு குடும்பங்களும் இத்திருமணத்தை எதிர்க்கிறது. அதன் காரணமாகவே பாதுகாப்பு கோரி இந்த ஜோடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இஸ்லாமிய விதி
இந்தியாவில் திருமணம், விவகாரத்து போன்றவற்றுக்கு ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சிவில் சட்டத்தைப் பின்பற்றி வருகின்றனர். அதன்படி முஸ்லீம் சட்டத்தில், ஒரு பெண் பருவமடைந்துவிட்டாலே திருணம் செய்து கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இதை குறிப்பிட்டே நீதிபதி இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications