பொது சிவில் சட்டத்துக்கு எதிராக உக்கிரத்தை காட்டுவோம்- முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டவட்டம்!
டெல்லி: பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடு விடுதலை அடைந்த காலம் முதல் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் பொது சிவில் சட்டங்களால் தனிநபர் சட்டங்கள் பாதிக்கப்படும் என்கிற அச்சமும் இருந்து வருகிறது. நாட்டின் சட்ட ஆணையம், உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துகளை முன்வைத்திருக்கின்றன.
அண்மையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. இதனையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பாக மீண்டும் விவாதம் நடைபெற்று வருகிறது. போபாலில் நேற்று பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் அவசியமானது என வலியுறுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அவசர கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் தனிநபர் வாரியத் தலைவர் ரஹ்மானி, கலீத் ரஷீத் மவுலானா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையத்திடம் எப்படியான கருத்துகளை முன்வைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத் தலைவர் ரஹ்மானி, பொது சிவில் சட்டத்தை முழுமையாகவே எதிர்க்கிறோம். இதனையே சட்ட ஆணையத்திடமும் வலியுறுத்த இருக்கிறோம் என்றார். அத்துடன் பொது சிவில் சட்டத்தால் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருமே பாதிக்கப்படுவர். இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்டது. இந்தியாவில் ஒற்றைத்தன்மை என்பதில் எதனிலும் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அனைத்துக் கூட்டணி கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில்தான் அமல்படுத்தவேண்டும் என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.












Click it and Unblock the Notifications