டிஜிட்டல் கேமரா, இமெயில்.. இறுதி கட்ட தேர்தலின்போதா மோடி இப்படி சிக்கலில் மாட்டுவது!
டெல்லி: லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அவர்.
பாகிஸ்தானின் பாலக்கோட், பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதன் பின்னணியில், தனது யோசனை இருந்ததாக நரேந்திர மோடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேகமூட்டம் இருக்கும் நாளில், தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் நாட்டு ரேடார்களால், கண்டுபிடிக்க முடியாது என்றுதான் விமானப் படையினரிடம் கூறியதாக மோடி தெரிவித்திருந்தார்.

வாய் பேச்சால் வம்பு
ரேடார் கருவி குறித்த, குறைந்தபட்ச விவரமில்லாமல், நரேந்திர மோடி இவ்வாறு பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர்களிடமிருந்து மட்டுமல்லாது, சமூக வலைத் தளங்களிலும் கடுமையான கிண்டல்களும், கேலிகளும் வெளியாகின. இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக, மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மோடி. இப்போதும் மோடி தனது பேச்சின் காரணமாகத்தான் வம்பில் மாட்டி உள்ளார்.

டிஜிட்டல் கேமரா, இமெயில்
லோக்சபா தேர்தல், இறுதிக் கட்டத்தை எட்டி விட்ட நிலையில், பல்வேறு தொலைக்காட்சி சேனல்களுக்கும் சிறப்பு பேட்டி அளித்து வருகிறார் நரேந்திர மோடி. 'நியூஸ் நேசன்' என்ற தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், டிஜிட்டல் கேமரா மற்றும் இ-மெயில் தொடர்பாக நரேந்திர மோடி பேசிய பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பி விட்டது.

நாங்கல்லாம் அப்பவே அப்படி
அந்தப் பேட்டியில் நரேந்திர மோடி கூறுகையில், 1987-88ஆம் ஆண்டு வாக்கில் டிஜிட்டல் கேமராவை நான் முதன் முதலாக பயன்படுத்தினேன். மிகச் சிலரிடம் தான் இமெயில் அப்போது பயன்பாட்டில் இருந்தது. அந்த காலகட்டத்தில், அத்வானியின் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்ற போது, நான் டிஜிட்டல் கேமராவில் அதை போட்டோ எடுத்தேன். பிறகு, அதை இ-மெயில் மூலமாக நான் டெல்லிக்கு அனுப்பி வைத்தேன். அது கலர் புகைப்படமாக பிரிண்ட் ஆனது. இதை பார்த்துவிட்டு எப்படி எனது கலர் புகைப்படம் வெளியானது என்று அத்வானியே ஆச்சரியப்பட்டார். இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இது தெரியாம போச்சே
இதில் சர்ச்சைக்கு காரணம் என்னவென்றால், இமெயில் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 1995ஆம் ஆண்டில் தான். ஆனால், மோடி அதற்கு பல வருடங்கள் முன்பாகவே இமெயில் சேவையை பயன்படுத்தி விட்டதாக கூறியுள்ளார். அதேபோல டிஜிட்டல் கேமரா அறிமுகமாவதற்கு 8 வருடங்கள் முன்பாகவே மோடி அதை பயன்படுத்தியதாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள் இந்த துறையில் உள்ளவர்கள். இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களில் மீண்டும் கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளார் நரேந்திர மோடி.

இப்போ இது தேவையா
நரேந்திர மோடி பொதுவாக பத்திரிகையாளர்களை சந்திப்பதை கடந்த 5 வருடங்களாக தவிர்த்துவந்தார். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உரையை தான் அவர் பேசி வருவது வழக்கம். லோக்சபா தேர்தல் நேரத்தில் திடீரென தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை சந்திக்க ஆரம்பித்தார். ஆனால், இவ்வாறு அளிக்கக்கூடிய பேட்டிகளில் தவறுதலாக பல தகவல்களை தெரிவித்து சிக்கலில் மாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications