ரூ.142 கோடிக்கு ஆதாயம்.. சோனியா - ராகுலுக்கு பெரிய சிக்கல்.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED வாதம்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கின் முதற்கட்ட விசாரணையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மோசடி செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ.142 கோடிக்கு அவர்கள் 2 பேரும் ஆதாயம் பெற்று பலனடைந்துள்ளனர் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. நேஷனல் ஹெரால்டு என்பது நேரு தொடங்கிய நிறுவனமாகும்.

இது நஷ்மடைந்தபோது சோனியா, ராகுல் ஆகியோர் நேஷனல் ஹெரால்டு சொத்துகளை சட்டவிரோதமாக மாற்றியதாக புகார்கள் கிளம்பியது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்கு சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று கூறினார். அதுமட்டுமின்றி டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கியது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் அமலாக்கத்துறை என்ட்ரி கொடுத்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டது. சமீபத்தில் டெல்லியில் உள்ள கீழமை நீதிமன்றமான ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்களும் சேர்க்கப்பட்டது. அதோடு அவர்களுக்கு நீதிமன்றம் சார்பில் நோட்டீசும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே தான் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தனக்கு வழங்க வேண்டும் என்று வழக்கை தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தது. அப்போது வழக்கு தொடர்பான அனைத்து தரவுகளையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு சோனியா, ராகுல் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.
மேலும் அதில் முதற்கட்ட விசாரணையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மோசடி செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. அதுமட்டுமின்றி அமலாக்கத்துறை ரூ.751.9 கோடி சொத்துகளை முடக்கம் செய்வதற்கு முன்பு ரூ.142 கோடிக்கு காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பலனடைந்துள்ளனர் என்று டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் இந்த வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி உள்ளார். அமலாக்கத்துறையின் இந்த வாதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications