ரயில்களில் ஹலால் இறைச்சி உணவு மட்டும் வழங்குவதாக புகார்.. மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
டெல்லி: ரயில்களில் அசைவ உணவை விரும்பும் பயணிகளுக்கு ‛ஹலால்' இறைச்சி உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணி பற்றிய தகவல் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் சுனில் அஹிர்வார். இவர் சமீபத்தில் பரபரப்பான புகார் ஒன்றை முன்வைத்தார். ரயில்களில் இந்து, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பல்வேறு மதத்தை சேர்ந்த மக்கள் பயணிக்கின்றனர்.

ஆனால் ரயில் உணவுகளில் அசைவ உணவு தயாரிப்புக்கு ஹலால் இறைச்சி மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இது பிற மதத்தினரின் உணவு சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக சுனில் அஹிர்வார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளித்தார். அதில், ‛‛ரயில்களில் ஹலால் இறைச்சி உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேவேளையில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த பயணிகள் தங்களின் மத நம்பிக்கை அடிப்படையிலான உணவை பெற முடியவில்லை. இது மத உரிமை அடிப்படையிலான உணவை தேர்வு செய்வதற்கு எதிராக உள்ளது.
இது பிற சமூகத்தினர் மீதான பாரபட்சமான நடவடிக்கை. அதோடு அரசமைப்பு வழங்கி உள்ள சமத்துவம், கண்ணியமான வாழ்க்கை, மத சுதந்திரம் வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மைக்கு எதிராக உள்ளது மேலும் ஹலால் இறைச்சி மட்டும் என்பது பாரம்பரியமாக இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்து மதத்தை சேர்ந்த தலித் சமூகத்தின் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது'' என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அரசு முகமை என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினரின் உணவு பழக்க வழக்கத்தை ரயில்வே மதித்து செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. அதோடு, ரயில்வே வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications