தேசியளவில் ஊரடங்கு அறிவிப்பு மட்டுமே இல்லை.. 98% மக்கள் ஏதோ ஒரு வகையான.. லாக்டவுன் கீழ் தான் உள்ளனர்
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டை போல நாடு முழுவதும் ஊரடங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும்கூட சுமார் 98% மக்கள் ஊரடங்கு அல்லது எதாவது ஒரு வகை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்குத் தினசரி கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஊரடங்கு கடைசி ஆயுதம்
மக்களைப் பாதிக்காத வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியிருந்தார். மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்பதால் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அல்லது அதற்கு இணையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட்
ஒரு நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் எந்தளவுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் டிராக்கர் மதிப்பெண்களை வெளியிடும். அதாவது ஒரு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால் இந்த மதிப்பெண் 100ஆக இருக்கும். அதேபோல குறைவாக இருந்தால் மதிப்பெண்ணும் குறையும்.

இந்தியாவின் மதிப்பெண்
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, இந்தியாவிற்கான இதன் மதிப்பெண் 58 ஆக இருந்தது. ஆனால், ஏப்ரல் 30ஆம் தேதி இது 74 ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களும் ஊரடங்கு உள்ளிட்ட விதிகளை அறிவித்துள்ளதால், இந்த மதிப்பெண் அடுத்து அப்டேட் செய்யப்படும்போது, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, இது 100ஆக இருந்தது.

98% மக்கள்
மாநில வாரியாக பார்க்கும்போது, நாட்டில் 28 மாநிலங்களிலும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் எதோ வகையிலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. சில மாநிலங்களில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நாட்டிலுள்ள 98% மக்கள் ஊரடங்கு அல்லது எதாவது ஒரு வகை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

வாரியான
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், தெலங்கானா, அசாம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேரக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதேபோல திரிபுரா, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், காஷ்மீர், லடாக் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Array
அதேபோல முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ரேசன் அட்டைதாரர்களுக்குப் பணமும் உணவுப் பொருட்களும் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களும் விரைவில் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications