தொடரும் தற்கொலைகள்... எதிர்ப்புகள்- அடுத்த ஆண்டு மே 5-ல் நீட் தேர்வு; ஜூன் 2-வது வாரம் ரிசல்ட்!
டெல்லி: 2024-ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் மே 5-ந் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நீட் நுழைவுத் தேர்வானது அகில இந்திய பாடங்கள் (சிபிஎஸ்இ உள்ளிட்டவை) அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத் திட்டங்களில் படித்து அதிக மதிப்பெண்களை பெற்றாலும் நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலையில் அம்மாணவர்களின் மருத்துவ கனவு சாகடிக்கப்படுகிறது.

இதனால் மனம் நொந்து போன அரியலூர் அனிதா தொடங்கி தாம்பரம் ஜெகதீஷ் வரை எண்ணற்ற மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிற பேரவலம் தமிழ்நாட்டில் தொடருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி முகாம்கள் சிறை கூடங்கள் போல நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இந்த ஆண்டு மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான பொது கருத்து நிலவுகிறது.
ஆனாலும் தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வை எதிர்ப்புகளுக்கு இடையே நடத்தி வருகிறது. 2024-ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் மே 5-ந் தேதி நடத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 2-வது வாரம் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications