ஹிஜாப் ஆதரவாளர்கள் அல் காயிதாவா? நெறியாளர் பேச்சு -ஆங்கில டிவிக்கு அபராதம் விதித்து எச்சரித்த ஆணையம்
டெல்லி: கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக போராடியவர்களையும், ஹிஜாபுக்கு ஆதரவாக விவாதத்தில் பேச வந்தவர்களையும் அல் காயிதா ஆதரவாளர்களாக சித்தரித்த தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கும் அதன் நெறியாளருக்கு கண்டனம் தெரிவித்துள்ள செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் ரூ.50,000 அபராதம் விதித்து உள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யு. கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் மற்ற கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினரான ஏபிவிபி காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.

வன்முறை
ஹிஜாபுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கிளம்பிய பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவே வன்முறைக் களமாக மாறியது. கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி மண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஹிஜாபுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி முஸ்கான்
அப்போது முஸ்கான் என்ற ஹிஜாப் அணிந்த மாணவி அருகே காவி துண்டு அணிந்தவர்கள் ‛ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிட்டனர். இதையடுத்து அந்த மாணவி தனது கையை உயர்த்தி ‛அல்லாஹு அக்பர்' என பதில் கோஷமிட்டது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

அல் காயிதா தலைவர்
இதனால் தமிழ்நாடு தொடங்கு இந்தியா முழுவதும் நடைபெற்ற ஹிஜாப் ஆதரவு போராட்டம் வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. இதற்கிடையே மாணவி முஸ்கானுக்கு அல் காயிதா அமைப்பின் தலைவர் ஜவாஹிரி ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டார். ஆனால், ஜவாஹிரியின் வாழ்த்தை முஸ்கானும் அவரது தந்தையும் ஏற்க மறுத்தனர்.

தொலைக்காட்சி விவாதம்
இந்த நிலையில் நியூஸ் 18 எனப்படும் தனியார் ஆங்கில தொலைக்காட்சியில், ஹிஜாப் தொடர்பாக விவாதம் நடத்திய நெறியாளர், ஹிஜாபுக்கு ஆதரவாக பேசியவர்களை அல் காயிதாவுடன் தொடர்புபடுத்தியதுடன், அவர்களை "ஜவாஹிரியின் ஆதரவாளர், ஜவாஹிரியின் பிரச்சாரகர், உங்களுக்கு ஜவாஹிரி கடவுள்" என்றெல்லாம் குறிப்பிட்டதாக புகாரளிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு
இது தொடர்பாக செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஊடக அறத்தை மீறி செயல்பட்டு, விருந்தினர்கள் மீது மதசாயம் பூச முயன்றதாக தெரிவித்துள்ளது. எனவே அந்த தொலைக்காட்சிக்கு ஆணையம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

வீடியோவை நீக்க உத்தரவு
இனி எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றால், நெறியாளர் அமன் சோப்ராவின் தனிப்பட்டை இறுப்பை ஆணையம் உறுதி செய்யும் என்று எச்சரித்து உள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய இந்த விவாதத்தின் வீடியோவை அனைத்த் சமூக வலைதளங்களில் இருந்து 7 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications