300 பெண்களை நாசமாக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை உடனே கைது செய்யுங்க.. தேசிய பெண்கள் ஆணையம் கடும் உத்தரவு!
டெல்லி: கர்நாடகாவில் 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்களை பதிவு செய்த பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவை உடனே கைது செய்ய வேண்டும் என கர்நாடகா காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளவர் சிட்டிங் எம்பியான பிரஜ்வல். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா.

ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்கு முன்னதாக தொகுதி முழுவதும் பல நூறு பென் டிரைவ்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த பென் டிரைவ்களில் பிரஜ்வல் ரேவண்ணா பல நூறு பெண்களை நாசமாக்கிய வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா அரசு நடவடிக்கை எடுக்க கோரியது மாநில மகளிர் ஆணையம். இதனடிப்படையில் முதல்வர் சித்தராமையா, எஸ்.ஐ.டி.விசாரணைக்கு உத்தரவிட்டார். எஸ்.ஐ.டி. குழுவினரும் ஹாசன் சென்று விசாரணைகளை நடத்தினர். ஆபாச வீடியோக்களையும் ஆய்வு செய்தனர்.
அதேநேரத்தில் முக்கிய குற்றவாளியான பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது அரசியல் ரீதியாக ஜேடிஎஸ் கட்சியின் கூட்டணி கட்சியான பாஜ்கவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. 2023-ம் ஆண்டே பாஜக தலைமைக்கு பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 2976 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை ஜேடிஎஸ் தலைவரும் பிரஜ்வல் ரேவண்ணா சித்தப்பாவுமான குமாரசாமி அறிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் தலையிட்டுள்ளது. கர்நாடகா மாநில டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. மேலும் நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications