என்டிஏ எம்பி-க்கள் கூட்டம்.. அரசியல் சாசன புத்தகத்தை வணங்கிய மோடி.. கைதட்டி வரவேற்ற தலைவர்கள்!
டெல்லி : என்டிஏ கூட்டணி எம்பி-க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த நரேந்திர மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த அரசியல் சாசன புத்தகத்தை வணங்கினார்.
543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்க 272 எம்பி-க்கள் தேவைப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்பி-க்களுடன் சேர்த்து என்டிஏ கூட்டணிக்கு 293 எம்பி-க்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது ஆதரவு கடிதங்களை கொடுத்தனர்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்று வந்தது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மேடையில் இருக்கை அமைக்கப்பட்டது. இதில் மோடியின் அருகில் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாருக்கு இருக்கை அமைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க நரேந்திர மோடி வருகை தந்த போது, அங்கிருந்த எம்பி-க்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் வரவேற்பால் உற்சாகமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த அரசியல் சாசன புத்தகத்தை கையில் எடுத்து வணங்கினார்.
அதன்பின் என்டிஏ கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக ராஜ்நாத் சிங் முன்மொழிய, அதனை அமித் ஷா வழிமொழிந்தார். அப்போது அங்கிருந்த எம்பி-க்கள் மோடி.. மோடி.. என்று உற்சாக குரல் எழுப்பி கோஷமிட்டனர். மேலும், ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications