உள்ளாடையை கழற்றக்கோரி நீட் தேர்வில் சர்ச்சை! மாணவிகளுக்கு மறுதேர்வு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: கேரளா கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வில் உள்ளாடைகளை கழற்றக்கோரி சர்ச்சை எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக கூறி அதற்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஜூலை மாதம் 17 ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. 543 நகரங்களில் 3,800க்கும் அதிகமான மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7-ல் வெளியாகிறது! ஆக.30-க்குள் ஆன்சர் கீ வெளியீடு!
உள்ளாடையை கழற்றக்கோரி சர்ச்சை
தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் சோதனை என்ற பெயரில் கேரள மாநிலம் கொல்லம் மருத்துவ இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாக தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடையை கழற்ற அதிகாரிகள் நிர்பந்தித்ததாக சர்சசை எழுந்தது.
மறுத்த தேசிய தேர்வு முகமை
இதனை துவக்கத்தில் தேசிய தேர்வு முகமை மறுத்தது. இருப்பினும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய் உத்தரவு பிறப்பித்தது. அதோடு பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை காக்கும் தேசிய ஆணையம் சார்பில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
7 பேர் அதிரடி கைது
மேலும் பல்வேறு தரப்பினர் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் கொட்டாரக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
மாணவிகளுக்கு மறுதேர்வு
இந்நிலையில் தான் தற்போது தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் 4ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு இ-மெயிலில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.