நீட் தேர்வு..ராஜன் குழு அறிக்கைக்கு தடை கேட்ட வழக்கு..தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி:நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வு உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்றுச் சேர்க்கை முறை மற்றும் சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர்கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
நீட் தேர்வு குறித்து மக்களிடமிருந்து மின்னஞ்சல் வாயிலாகக் கருத்துகள் பெறப்பட்டன. கடந்த ஜூலை மாதம் அறிக்கையாக தயார் செய்து தமிழக அரசிடம் சமர்பித்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 85,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்திருக்கின்றன, அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்படும் என்று கமிட்டியின் தலைவர் ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நீட் தேர்வில் விலக்கு பெற தனிச்சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம், 2007-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு தடைச்சட்டத்தை மையமாக வைத்து விலக்கு பெறலாம், 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நடத்தலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

பாஜக வழக்கு
இதுமட்டுமல்லாமல், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் முதல் தலைமுறை படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த கமிட்டிக்குத் தடை கேட்டு, பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர், கரு.நாகராஜன் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அனுமதிக்கக் கூடாது
அதில், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது நாடு முழுவதற்கும் பொதுவானது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதன்படி, மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை அந்தக் குழுமத்திடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதை மீறும் வகையில் தமிழ்நாடு அரசு, குழு அமைத்திருக்கிறது. இது அனுமதிக்கத்தக்க ஒன்று அல்ல' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றம் தள்ளுபடி
இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, பொது பள்ளி நடைமுறைக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் குழு அமைத்தது சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த திரிஷா மகாலட்சுமி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications