மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை: நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் நுழைவுத் தேர்வு!
டெல்லி: நாடு முழுவதும் இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் 18.72 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்புக மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைக்கிறது என்பது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கருத்து.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தர வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபையில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அது ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
மேலும் நீட் தேர்வு அழுத்ததால் தற்கொலை செய்து கொள்கிற மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் தேர்வு தற்கொலைகள் இன்று வரை நீடிக்கிறது. அரியலூரில் மற்றொரு மாணவி, நிஷாந்தி நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5.20 மணிவரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து அறிவுரைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது; அதேபோல் நீட் நுழைவுத் தேர்வு மையங்களும் வெவ்வேறு மாநிலங்களிலும் போடப்பட்டுள்ளது. அத்துடன் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதனால் நீட் நுழைவுத் தேர்வை சில வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications