டெல்லியில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்-மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடு முற்றுகை!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்டு மாணவர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு நடத்திய நீட் மற்றும் நெட் ஆகிய தேர்வுகள் பெரும் சர்ச்சைகளாகி உள்ளன. இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் அடுக்கடுக்கான முறைகேடுகள் அம்பலமாகி வருகின்றன. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியானது தொடர்பாக பீகாரில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரங்களில் பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு தொடர்பிருக்கிறது என்பதும் கைது செய்யப்பட்டோரின் ஒப்புதல் வாக்குமூலம்.

மேலும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்ட மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முறைகேடு வழக்குகள் ஜூலை 8-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த நெட் தேர்விலும் முறைகேடுகள் இருப்பதால் நேற்று திடீரென நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நீட் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்தனர். மேலும் பணக்கட்டுகளை மூட்டை மூட்டையாக மத்திய அமைச்சர் வீடு முன்பாகவும் அவர்கள் கொட்டினர்.மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடு முன்பாக போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரஸ் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதேபோல டெல்லி சாஸ்திரி பவன் முன்பாக இடதுசாரி மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
மேலும் நாடு தழுவிய அளவில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. வரும் 24-ந் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் திமுகவும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications