கடவுள் காப்பாற்றிவிட்டார்! அன்று அழுத மாணவிக்கு இன்று அடித்த ஜாக்பாட் - 'நிமிட தாமத' வீடியோ வைரல்!
டெல்லி: நீட் தேர்வு அன்று ஒரு நிமிடம் தாமதமாக சென்றதால் அந்த தேர்வை எழுத முடியாமல் கண்ணீர் விட்ட மாணவிக்கு இன்று மறுத்தேர்வு மூலம் ஜாக்பாட் அடித்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனினும் நன்கு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த மறுத்தேர்வு மிகுந்த மனவலியை ஏற்படுத்தும் என்பதையும் நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த காலை மாலை இரு வேளைகளாக நடத்தப்பட்ட தேர்வில் எதை கொண்டு வர வேண்டும், எதை அனுமதிக்க மாட்டார்கள், எத்தனை மணிக்கு வர வேண்டும், எத்தனை மணிக்கு வந்தால் அனுமதி மறுக்கப்படும் உள்ளிட்ட விதிமுறைகள் எல்லாம் ஹால் டிக்கெட்டிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் டிராபிக்கால் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட இன்ன பிற காரணங்களால் நீட் மட்டுமில்லை, காவலர் தேர்வு பல்வேறு தேர்வுகளுக்கு சரியான நேரத்திற்கு வர முடியாத மாணவர்கள், காவலர்கள் அந்த ஆண்டு அந்த தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த தாமதங்களால் எத்தனை பேரின் வாழ்க்கை திசை திரும்பி போயுள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் கடந்த 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் போது பீகார் மாநிலம் ராஜ்பூரை சேர்ந்த மாணவி ஒருவர் 1.30 மணிக்கு தேர்வு நடத்தும் இடத்திற்கு வர வேண்டிய நிலையில் 1.31 மணிக்கு வந்ததால் அவர் எத்தனை முறை கெஞ்சி பார்த்தும் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
இதையடுத்து நீட் தேர்வு மையத்தின் இரும்பு கதவுகளுக்கு முன்னால் நின்று, அந்த மாணவி கதறி அழுதார். அவர் அழுது கொண்டே "சார், ஒரே ஒரு நிமிடம் தான் தாமதம்... தயவுசெய்து என்னை உள்ளே விடுங்கள்" என்று அந்தப் பெண் கெஞ்சியபோது, அங்கிருந்த அதிகாரிகள் இதயமே இல்லாதவர்கள் போலக் கதவை அடைத்தார்கள்.
அந்த வீடியோவைப் பார்த்து ஒட்டு மொத்த நாடுமே, "ஐயோ, அந்தப் பெண்ணின் ஒரு வருட உழைப்பு வீணாகிவிட்டதே" என்று கண்ணீர் வடித்தது.
ஆனால், இன்று காலம் ஒரு 'யு-டர்ன்' அடித்துள்ளது! 2026-ஆம் ஆண்டுக்கான நீட் (NEET-UG) தேர்வில் நடந்த வரலாறு காணாத முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் காரணமாக, ஒட்டுமொத்தத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் வரும் ஜூன் 21 ஆம் தேதி மறுத்தேர்வு நடத்தப்படுகிறது என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே, அன்று அந்த மாணவி கதறி அழுத வீடியோ மீண்டும் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கிவிட்டது.
நெட்டிசன்களின் அதிரடி கமெண்ட்கள்: அன்று அந்தப் பெண் அழுதபோது அதை 'துரதிர்ஷ்டம்' என்று நினைத்தோம். ஆனால் இன்று சமூக வலைதளங்களில் மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 1 நிமிட தாமதப்படுத்தினாலும் அந்த மாணவியை கடவுள் காப்பாற்றிவிட்டார். அவரது மருத்துவ கனவை நனவாக்க கடவுள் ஒரு வாய்ப்பை அதுவும் இந்த ஆண்டே அளித்துவிட்டார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அதே வேளையில் தேர்வு எழுத குறித்த நேரத்திற்கு செல்ல முடியாததால் அந்த மாணவியை போல் நிறைய பேர் ஏமாற்றமடைந்திருக்கலாம். அவர்களுக்கு தற்போதைய மறுத்தேர்வு மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால் இரவு பகல் பாராமல் படித்து தேர்வுக்கு தயாரான லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் இந்த மறுத்தேர்வால் சிதைந்துவிட்டதை என்பதை மறுக்க முடியாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications