சமூக சீர்கேடு விவகாரம்தான்.. நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் என்பது சமூக சீர்கேடுகள் விவகாரம்; அதனால்தான் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு முக்கியத்துவம் தருகிறோம்; அதே நேரத்தில் நீட் தேர்வு முறைகேடுகளால் முழுமையாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யாமல் நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்ற சென்னை ஐஐடி வல்லுநர் குழுவின் அறிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை ஐஐடி இயக்குநர், நீட் தேர்வை நடத்தும் தேசிய முகமையின் ஆட்சிக் குழு உறுப்பினர். ஆகையால் சென்னை ஐஐடி வல்லுநர் குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீட் மறுதேர்வு என்பது ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களுக்குமே நடத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை இல்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1.08 லட்சம் பேருக்கு மட்டுமே நீட் மறுதேர்வு நடத்தக் கோருகிறோம் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்:
- நீட் தேர்வு முறைகேடுகள் என்பவை சமூக சீர்கேடுகள் விவகாரம். இதனால்தான் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் தருகிறது.
- உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை பல லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கு விசாரணையை இன்றே நடத்துகிறது உச்சநீதிமன்றம்.
- நீட் வினாத்தாள் கசிவு, விற்பனை என்பது ஒட்டுமொத்தமாக மாணவர்களை எந்தெந்த வகைகளில் பாதித்துள்ளது என்பதை மனுதாரர்கள் விரிவாக விவரிக்க வேண்டும்.
- நீட் தேர்வு முறைகேடுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பாதிப்பு என உறுதியாக தெரிந்தால்தான் மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட முடியும். இல்லை எனில் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications