இன்று இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்.. பிரதமர் மோடி, ஜனாதிபதியுடன் சந்திப்பு! என்ன திட்டம்?
டெல்லி : நேபாள பிரதமர் பிரசந்தா, அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் நேபாள பிரதமர் பிரசந்தா.
நேபாள பிரதமர் பிரசந்தா, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் 2:50 மணிக்கு வருகிறார். அவருடன் நேபாள அரசின் உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர்.

நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.
பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் நேபாள பிரதமர் பிரசந்தா.

இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேபாள பிரதமர் பிரசந்தா சந்தித்துப் பேச உள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கும் செல்கிறார். சனிக்கிழமை மாலை காத்மண்டுவுக்கு புறப்படுவார். பிரசந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேபாள பிரதமராக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications