நடுவானில் தூங்கும் பைலட்கள்! ஆனந்த் மகேந்திரா போட்ட ஒற்றை ட்வீட்! அப்படியே திரண்டு வந்த நெட்டிசன்கள்
டெல்லி: பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பைலட்கள் குறித்துப் பகிர்ந்த சர்வே இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
இப்போது இருக்கும் போக்குவரத்து முறைகளில் மிகவும் பாதுகாப்பானதாக விமான போக்குவரத்து தான் இருக்கிறது. விமானத்தில் விபத்துகள் என்பது மிகவும் அரிதானதாகவே ஏற்படும்.
இதனிடையே கடந்த மாதம் இந்திய விமானிகள் குறித்து வெளியான சர்வே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் இந்திய விமானிகள் குறித்துப் பல தரவுகள் கூறப்பட்டு இருந்தது.

விமானிகள்
விமானிகள் பெரும்பாலும் கிளம்பும் போதும், தரை இறங்கும்போதும் மட்டுமே மட்டுமே முழு கண்டிரோலை வைத்து இருப்பார்கள். மற்ற நேரங்களில் ஆட்டோ பைலட் மோடில் தான் போட்டு இருப்பார்கள். நம்மிடம் இப்போது அதிநவீன கருவிகள் இருப்பதால் ஆட்டோ பைலட் மோடில் போட்டாலும் பயணம் பத்திரமாகவே இருக்கும். ஆட்டோ பைலட் மோடில் போட்டாலும் விமானிகள் அருகே தான் இருக்க வேண்டும்.

66% பேர்
இருப்பினும், கடந்த மாதம் வெளியான இந்த சர்வேவில், சுமார் 66% இந்திய விமானிகள் ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டுத் தூங்கி உள்ளதை ஒப்புக் கொண்டனர். அதுவும் இணை விமானியிடம் சொல்லாமலேயே இப்படிச் செய்து உள்ளனர். சில விமானிகள் பணியில் இருக்கும் போது அவர்களை அறியாமலேயே தூங்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். மொத்தம் இயக்கும் 542 இந்திய விமானிகளிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது.

காரணம்
சுமார் 54% விமானிகள் கடுமையான பகல் நேரத் தூக்கத்தாலும் 41% பேர் லேசான பகல் நேரத் தூக்கப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவே விமானிகள் திடீர் திடீரென காக்பேட்டில் தூங்கக் காரணமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதை அவர்கள் மைக்ரோ-ஸ்லீப் எனக் குறிப்பிடுகிறார்கள். அதிகாலை நள்ளிரவு என மாறி மாறி எழுவதே இதன் பிரச்சினையாக உள்ளது.

ஆனந்த் மகேந்திரா
கடந்த மாதம் வெளியான இந்த சர்வே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா இந்த சர்வேவை தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். மேலும் அவர், "அருமை.. விமானத்தில் செல்வதற்கு முன் நான் படிக்க வேண்டிய முக்கியமானது" என்று சற்றே கிண்டல் அடிக்கும் வகையில் ட்வீட் செய்து உள்ளார். இது உடனே இணையத்தில் பேசு பொருள் ஆனது.

ஆட்டோ பைலட் பெட்டர்
இதற்குப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், "சார் கவலை வேண்டாம். ஆட்டோ பைலட் நமது பைலட்களை விடவே மிகச் சிறப்பாக வேலை செய்யும்" என்று கூறி இருந்தார். அதேபோல மற்றொரு நபர், "இதன் காரணமாகவே எப்போதும் ரயில்களே சிறந்தவை" என்றும் ட்வீட் செய்துள்ளார். இன்னும் சிலர் பைலட்டிற்கு வேலைப்பளு அதிகரித்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லியுள்ளார். இப்படி பலரும் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஷாக் சம்பவம்
விமானிகள் காக்பிட்டில் தூங்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கவே செய்கிறது. சமீபத்தில் சூடானின் இருந்து எத்தியோப்பியா விமானத்தின் பைலட்கள் இருவருமே தூங்கிவிட்டனர். இதனால் ஏர்போர்டில் விமானம் தரையிறங்கவில்லை. அவர்கள் ஆட்டோபைலட் மோடில் போட்டு இருந்ததால், விமானம் 37,000 அடி உயரத்தில் அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போது அலாரம் அடித்ததாலேயே விமானம் பைலட்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications