சங்கி என்ற வார்த்தை மட்டும்தான் இல்லை.. நாடாளுமன்றத்தில் வார்த்தை கட்டுப்பாடு பற்றி மஹுவா மொய்த்ரா!
டெல்லி: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலில் சங்கி என்ற வார்த்தை மட்டும்தான் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படுவது வழக்கம். பட்ஜெய் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என்று கூடும். நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் திட்டம்
இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப் போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேசமயம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் நுபுர் ஷர்மா விவகாரம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கூடுதலாக வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை செயலகம் உத்தரவு
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், முதலைக் கண்ணீர், அவமரியாதை, மாயை, பச்சோந்தி, கறுப்பு நாள் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டெரிக் ஓ பிரையன் கண்டனம்
மக்களவை செயலகத்தின் இந்த உத்தரவுக்கு மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. ஆனால் எம்.பி-க்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளனர். சாதாரணமாக உரை நிகழ்த்தும் போது பயன்படுத்தப்படும் திறமையற்றவர், வெட்கக்கேடு, ஊழல், துரோகம் உள்ளிட்ட அடிப்படை வார்த்தைகளை கூட பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் எனது உரையின் போது பயன்படுத்துவேன். இதற்காக என்னை இடைநீக்கம் செய்துகொள்ளுங்கள். ஆனால் ஜனநாயகத்திற்காக தொடர்ந்து போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மஹுவா மொய்த்ரா கண்டனம்
இதுகுறித்து பேசியுள்ள மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பாஜக எவ்வாறு இந்தியாவை அழித்து வருகிறது என்பது குறித்து பேசும்போது, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலில் சங்கி என்ற வார்த்தை மட்டும்தான் இல்லை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications