"டார்கெட்".. 9 மாநிலம் + 2024 நாடாளுமன்ற தேர்தல்.. பட்ஜெட் 2023ல் வரப்போகும் "மெகா" அறிவிப்புகள்?
கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்த சில மாற்றங்களை இந்த முறை நிர்மலா சீதாராமனும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2.O அரசாங்கத்தின் கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 9 மாநில தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் பல புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதியான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நடப்பாண்டி வளர்ச்சி 6.8%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தது, விலைவாசி ஏற்றம் போன்றவை நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை தொடர்ந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மிசோரரம், கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா என மொத்தம் 9 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத கவனிச்சீங்களா? “திருவள்ளுவர் வழியில் மோடி ஆட்சி”.. நாடாளுமன்றத்தில் புகழ்ந்து தள்ளிய ஜனாதிபதி
குறைந்தப்பட்ச ஆதார விலை
கடந்த 2018-2019ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான அளவுக்கு பிரதிபலித்தன. இந்த பட்ஜெட்டில் அவர் உஜ்வாலா யோஜனா மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்கான நிதியை அதிகரித்தார். மட்டுமல்லாது குறுவை பயிர்களுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலையையும் ஒன்றரை மடங்கு அதிகரித்து வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் இதே பாணியை தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள்
அதன்படி PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் 11 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் 2019ம் ஆண்டு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இந்த திட்டத்தின் தொகை ரூ.6,000லிருந்து ரூ.8,000 ஆக அதிகரிக்கப்படலாம். அதேபோல கடந்த 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு சுமார் ரூ.1,24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகையும், இந்த 2023-2024ம் ஆண்டு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம். அதேபோல இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் கிராமங்களில் சுமார் 65% பேர் வசிப்பதால் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
100 நாள் வேலை திட்டம்
அதேபோல கிராம மக்களுக்கு கடன் வழங்குவது மேலும் எளிமையாக்கப்படலாம். கிராமப்புறம் குறித்த பேச்சை எடுத்தாலே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பேசாமல் கடந்து விட முடியாது. இந்த விஷயத்தில் கடந்த காலத்தில் மத்திய அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த 2021-20022ம் ஆண்டில் ரூ.98 ஆயிரம் கோடி இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2022-2023ம் ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு ரூ.73 ஆயிரம் கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே இந்த முறை இந்த தொகை அதிகரிக்கப்படலாம்.
பெண்கள்
அதேபோல கிராமபுறங்களில் வீடுகள் கட்டுவதற்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டில் ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல இந்த பட்ஜெட்டில் பெண் கல்வி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். ஏனெனில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. இது நடாளுமன்ற தேர்தலில் பெரும் பலனளித்தது. எனவே மத்திய அரசு பெண்களுக்கான துறையில் அதிக அளவு நிதி ஒதுக்கும்.
வேலைவாய்ப்பு
இது தவிர உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் அதிக கவனம் செலுத்தப்படும். ஏனெனில் உலக அளவில் பல பெரும் நிறுவனங்கள் சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் 'சீனா+1' என களமிறங்கியுள்ளன. இந்த +1 இந்தியாவுக்கு பெரிய அளவு கைக்கொடுத்துள்ளது. எனவே இதனை பயன்படுத்தி இந்தியாவில் உற்பத்தியை ஆதரிக்க பல சலுகைகள் வழங்கப்படும். அதேபோல உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (Production-Linked Incentive scheme) மூலம் சில பொருட்கள் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மேலும் சில பொருட்களுக்க விரிவுப்படுத்தப்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது.