நீட் முறைகேடு குற்றவாளிகளை பீகார் அமைச்சர் தங்க வைத்தது எங்கே? தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம்!
டெல்லி: பீகாரில் சிக்கிய நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை குற்றவாளிகளை பீகார் அமைச்சர் எங்கே தங்க வைத்திருந்தார் என்பதும் சர்ச்சையாகி உள்ளது. நீட் குற்றவாளிகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்க வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அந்த ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 5-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பெரும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. உச்சநீதிமன்றமும் இதில் தலையிட்டு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதனிடையே பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் விற்பனை விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் ரூ30 லட்சம் வரை விற்பனை செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக இடைத் தரகர்கள், மாணவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தரும் தொகைக்கு ஏற்ப நீட் வினாத்தாள் தேர்வு ஒருநாள் முன்னதாக, முதல் நாள் என ஒவ்வொரு நேரத்திலும் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் அம்பலமானது. மேலும் நீட் வினாத்தாளை விற்பனை செய்தவர்கள், தங்களுக்கு மாநில அமைச்சர் ஒருவர்தான் தேசிய நெடுஞ்சாலை ஆணைய விடுதி ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தார் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் ஊடக செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும் பீகார் மாநில அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என "இந்தியா" கூட்டணித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாட்னாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பாட்னாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விருந்தினர் மாளிகை வசதி இல்லை என்பதை என்.எச்.ஏ.ஐ தெளிவுபடுத்த விரும்புகிறது. அதன்படி, ஊடகங்கள் இதைக் கவனத்தில் கொண்டு, ஏற்கனவே வெளியிடப்பட்ட தவறான செய்தி அறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications