திரிபுரா, காஷ்மீர் டூ தமிழ்நாடு.. ஆள் கடத்தல் வழக்குகளில் என்.ஐ.ஏ. ரெய்டு- 44 பேர் அதிரடி கைது!
டெல்லி: வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை கடத்தி (ஆட் கடத்தல், ஆள் கடத்தல்) இந்தியாவுக்குள் இந்தியர்கள் போல போலியாக பணிபுரிய ஏற்பாடு செய்ததாக தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி 44 பேரை கைது செய்தனர்.
நாட்டின் 10 மாநிலங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். திரிபுரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஹரியானா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

வங்கதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்களாக பணிபுரிய ஏற்பாடு செய்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 வழக்குகளைப் பதிவு செய்தனர். இது தொடர்பாக இன்று 10 மாநிலங்களில் 55 இடங்களில் என்.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த இம்ரான்கான் என்பவர் சிக்கினார். அந்த சோதனையில் பெங்களூர், மங்களுரு நகரங்களில் பதுங்கி இருந்த இலங்கை தமிழர்களும் சிக்கினர்.
இந்த நிலையில் இன்று 10 மாநிலங்களில் ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் வங்கதேச நாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக திரிபுரா ஆதார் அடையாள அட்டையுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே நாட்டின் 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மின்னணு சாதனங்கள், செல்போன்கள், ரூ20 லட்சம் ரொக்கம், போலி ஆதார் அட்டைகள் ஆகியவற்றையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications