ஒரு திருட்டு புகார்.. நிர்பயா குற்றவாளிகளின் திட்டம்..அதிகாலை 2.30 மணிக்கு வழக்கு நடக்க என்ன காரணம்?
டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் மீது போடப்பட்டு இருந்த திருட்டு வழக்கு ஒன்றால் இன்று அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனை பெரிய கேள்விக்குறியானது. இன்று அதிகாலை தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்ததற்கு காரணம் இதுதான்.
Recommended Video
நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிகள் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
நேற்று
இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக நேற்று டெல்லி ஹைகோர்ட்டில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. நேற்று இரவு 9 மணிக்கு அவசர அவசரமாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து 10.15 மணிக்கு டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருலா ஆகியோர் விசாரித்தனர். குற்றவாளிகள் சார்பாக வழக்கறிஞர் ஏபி சிங் ஆஜர் ஆனார்.
வாதம்
நேற்று வழக்கறிஞர் ஏபி சிங் தனது வாதத்தில், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க கூடாது. இதை சில நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதில் எல்லாம் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அதில் தீர்ப்பு வரும் முன், தூக்கு தண்டனை கொடுத்தால் அது தவறான உதாரணமாக மாறும்.
மனித உரிமை ஆணையம்
மனித உரிமை ஆணையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் குடியரசுத் தலைவர் முன்னிலையில் கருணை மனு ஒன்று நிலுவையில் உள்ளது. பீகார் கோர்ட்டில் கருணை மனு கோரிக்கை ஒன்று உள்ளது. அதேபோல் டெல்லி ஹைகோர்ட்டிலும் ஒரு மனு நிலுவையில் உள்ளது. அதேபோல் புனிதா தொடுத்த விவாகரத்து மனு நிலுவையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார் .
திருட்டு வழக்கு
இதில் வழக்கறிஞர் ஏபி சிங் திருட்டு வழக்கு ஒன்றையும் குறிப்பிட்டார். அதாவது நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே பேருந்தில் வேறு ஒரு நபரிடம் இருந்து பணம், நகை திருடப்பட்டது. நிர்பயாவை கொலை செய்த அதே 6 பேரும் சேர்ந்துதான் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அடித்து, அவரிடம் இருந்து பணத்தையும், நகையும் திருடி இருந்தனர்.
என்ன வழக்கு
அதன்பின்தான் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்குதான் நிலுவையில் இருக்கிறது. இந்த திருட்டு வழக்கில் 6 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை. இதை இன்று வழக்கறிஞர் ஏபி சிங் எடுத்துக்காட்டி பேசினார். அதில், இந்த வழக்கு எதிலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது சரியாக இருக்காது என்று கூறினார்.
இல்லை முடியாது
இதற்கு குறுக்கிட்ட திகார் சிறை தரப்பு வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, இந்த வழக்கிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம். நாம் ஒரு கொலை மற்றும் வன்புணர்வு வழக்கு குறித்து பேசுகிறோம். நீங்கள் என்ன திருட்டு வழக்கையும், விவாகரத்து வழக்கையும் சுட்டிக்காட்டி நேரம் கடத்த பார்க்கிறீர்கள். இந்த வழக்கு முடிந்துவிட்டது. தண்டனை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது., என்றார்.
தள்ளுபடி செய்தார்
இதையடுத்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங் மீது கோபம் அடைந்த, நீதிபதி மன்மோகன், வழக்கறிஞர் ஏபி சிங் கொஞ்சம் உண்மையை பேச வேண்டும். நீங்கள் உங்கள் மனுதாரருக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அவர்களுக்கான நேரம் கடந்து விட்டது. இப்போது வந்து இப்படி கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்ற முடியாது. இதில் குற்றவாளிகளுக்கு சாதகமாக எங்களால் எந்த தீர்ப்பும் வழங்க முடியாது.
எதுவும்
எங்களால் எதுவும் செய்ய முடியாது. தூக்கு தண்டனையை ஏற்கனவே நான்கு முறை உறுதி செய்துவிட்டனர்.இதை எங்களால் மாற்ற முடியாது என்று, மிகவும் கண்டிப்பாக நீதிபதி குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். அதன்பின்தான் குற்றவாளிகள் தரப்பு அதிகாலை 2.30 மணிக்கு இதே கோரிக்கையை, இதே காரணத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.