கடனுக்கான தவணையை கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது! வங்கிகளுக்கு கடிவாளம் போட்ட நிர்மலா சீதாராமன்
டெல்லி: கடனுக்கான மாதத் தவணையை திருப்பிக் கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது என அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், சில வங்கிகளின் ஊழியர்கள் கடனை வசூலிக்கும் போது இரக்கமற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என தனக்கு புகார்கள் வருவதாகவும் அதனால் கடனை திருப்பிக் கேட்கும் போது வங்கிகள் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது என தாம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்கி ஊழியர்கள் என்ற பெயரில் தனியார் வங்கிகளிலிருந்து குண்டர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அத்துமீறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
தனியார் வங்கிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களும் கடனை வசூலிக்கிறோம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களுக்கு குறைவே இல்லை. அண்மையில் கூட புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மாதத் தவணை செலுத்தவில்லை எனக் கூறி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தவரின் 11 வயது மகளை கடத்திச் சென்று முத்தூட் நிதி நிறுவன ஊழியர் அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு மாதம் இ.எம்.ஐ. செலுத்தவில்லை எனக் கூறி வீட்டிலிருந்த பொருட்களை வீதியில் தூக்கி வைத்த எக்விடாஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இது போன்ற பல உதாரணங்களை கூறலாம்.
இந்தச் சூழலில் மாதத் தவணையை திருப்பிக் கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications