எல்லா வங்கியையும் தனியார் மயமாக்கமாட்டோம்; வங்கி ஊழியர்களை பாதுகாப்போம்... நிர்மலா சீதாராமன் உறுதி!
டெல்லி: அனைத்து வங்கிகளும் தனியார்மயமாக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்த வங்கிகளுக்கு பல தசாப்தங்களாக பாதுகாப்பு வழங்கிய ஊழியர்களுக்கு நாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்போம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வங்கிகள் தனியார்மயம் செய்யப்படுவதை கண்டித்து நேற்றும், இன்றும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகள் தனியார் மயம்
கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மத்திய அரசை கண்டித்து மார்ச் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி மார்ச் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். சுமார் 10 லட்சம் பணியாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

பணபரிமாற்றங்கள் முடங்கின
வங்கி சேவை, பணபரிமாற்றங்கள், காசோலை பரிவர்த்தனை என அனைத்து விதமான சேவைகளும் முடங்கின.தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டதால் பணபரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து வங்கிகளும் தனியார்மயமாக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஊழியர்களை பாதுகாப்போம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- ஒவ்வொரு அரசாங்க வங்கியும் தனியாருக்கு விற்கப்படுகின்றன என்று சொல்வது சரியல்ல. இந்த வங்கிகளுக்கு பல தசாப்தங்களாக பாதுகாப்பு வழங்கிய ஊழியர்களுக்கு நாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களின் நலன், ஓய்வூதியம் பாதுகாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications