ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு சிகிச்சை.. நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன். ஆனால், அபிநந்தன் செலுத்திய மிக்21 பைசன் வகை போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது.
இதையடுத்து பாராசூட் மூலமாக அபிநந்தன் கீழே குதித்து தப்பினார். அவர் பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் சென்று இறங்கியதால், அந்த ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
என்னை பாக். ராணுவம் மனரீதியாக துன்புறுத்தியது... முதல்முறையாக மனம் திறந்த அபிநந்தன்
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, அமைதி நடவடிக்கையாக அபிநந்தன் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு, முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் அவர் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பாராசூட்டில் இருந்து கீழே குதித்ததன் காரணமாக உடலில் அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இதுபோன்ற பரிசோதனை கட்டாயம் என்று நேற்றே விமானப்படை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக இந்த சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா உள்ளிட்ட பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். பாகிஸ்தானில் அபிநந்தன் பிடித்து வைத்திருந்தபோது நிர்மலா சீதாராமன் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
#Visual: Defence Minister Nirmala Sitharaman met Wing Commander Abhinandan Varthman at a hospital in Delhi today. pic.twitter.com/WD927TQHOV
— ANI (@ANI) March 2, 2019
நமது நாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நிலை வந்தது.
ஆனால், அபிநந்தன் நேற்று இந்தியா திரும்பிய பிறகு ஜெய் ஹிந்த் என்று நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் பிறகு இன்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.