ஜிஎஸ்டி 2.0ஐ விட்டு தள்ளுங்க.. ஜிஎஸ்டி 3.0 பற்றி நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்! ஆஹா சூப்பர்
டெல்லி: நமது நாட்டில் ஜிஎஸ்டி 2.0 இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களின் வரிச் சுமை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி 3.0 குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வரி இருந்தது. இதனால் தொழில் செய்வதே சிரமமாக இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். மேலும், எளிமையான வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதை ஏற்றே மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்தது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அது பல்வேறு மாநில மற்றும் மத்திய வரிகளை ஒரே அமைப்புடன் இணைத்து. மாநிலத்திற்கு ஒரு வரி என்பது மாறி, நாடு முழுக்க ஒரே வரி என்ற முறை கொண்டு வரப்பட்டது. இதுவே ஜிஎஸ்டி 1.0ஆக இருந்தது.. இது நாட்டின் வரி ஒருங்கிணைப்புக்கான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் மத்திய அரசு இப்போது ஜிஎஸ்டி 2.0ஐ கொண்டு வந்துள்ளது. ஜிஎஸ்டி 1.0இல் 5%, 12%, 18%, 28% என்று மூன்று வரிகள் விதிக்கப்பட்ட நிலையில், இப்போது 12% மற்றும் 18% வரி நீக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களுக்கும் 5% மற்றும் 18% வரி விதிக்கப்படும்.. வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்த வரி முறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் 3.0
இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவுக்கு அளித்த பிரஸ் மீட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 1.0 "ஒரே நாடு, ஒரே வரி" என்ற கருத்தை மையமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி 2.0 எளிமையை வலியுறுத்துகிறது என்றும் எதிர்காலத்தில் ஜிஎஸ்டி 3.0 மேலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறுகையில், "குறைக்கப்பட்ட வரியின் பலன்களைத் தொழில் நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்.. செப்டம்பர் 22ம் தேதி புதிய வரி முறை அமலுக்கு வந்த பிறகு இதை நிச்சயம் நாங்கள் கண்காணிப்போம். அதுவே எங்கள் முக்கிய பணியாக இருக்கும். குறைக்கப்பட்ட வரி விகிதங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்.. தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்" என்றார்.
மிக முக்கிய மாற்றம்
இந்த இரு அடுக்கு ஜிஎஸ்டி வரி அமைப்பு மிக முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. இது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு மிக பெரியளவில் உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் அடுத்த கட்டமான ஜிஎஸ்டி 3.0 பற்றியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைக் கூறினார்.. ஜிஎஸ்டி 2.0இல் கொண்டு வரப்பட்டு எளிமை, ஜிஎஸ்டி 3.0இல் நிலைநிறுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்து ஜிஎஸ்டி 3.0
அதாவது ஜிஎஸ்டி 3.0 ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் சிறு வணிகர்களுக்குச் சுமையின்றி வரிகளை எளிமையாக்கி வைத்திருப்பதே இதன் நோக்கமாக இருக்கும். இந்தச் சீர்திருத்தங்கள் வரி செலுத்துபவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், நுகர்வையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது. இது குறித்து நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், "பொருளாதார வளர்ச்சி மீண்டும் வரும். இந்தச் சீர்திருத்தம் பொருளாதாரத்திற்கு ஒரு உந்துசக்தியாக அமையும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications