மாநிலங்களுக்கான நிதியை நாங்களே ஒதுக்கலாம்னு இருக்கோம்... நிதி ஆயோக்கின் புதிய அவதாரம்
டெல்லி:மாநிலங்களின் நிதியை கையாள நிதி ஆயோக் தயார் நிலையில் உள்ளதாக அதன் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியுள்ளார்.
நிதிக்குழுவின் முன்னாள் இயக்குநரான விஜய் கேல்கர் ஒரு யோசனையை தெரிவித்திருந்தார். அதாவது, நிதி ஆயோக் அமைப்புக்கு நிதியைக் கையாளும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் மாநிலங்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வு நிலையைக் குறைக்க முடியும் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் நிதி ஆயோக்கின் துணை தலைவரான ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக செயல்படும் நிதி ஆயோக், மாநிலங்கள் செயல்படுத்தும் மேம்பாட்டு நிதியைக் கையாளவும் தயார்.
இது குறித்து 15வது நிதிக்குழுவுடன் பேசி இறுதியான ஒரு முடிவெடுக்கப்படும். மாநிலங்களுக்கான மேம்பாட்டு செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சுதந்திரமான செயல்பாடு இருக்கலாம்.
இது போன்றதொரு கருத்து என்னுள் நிலவி வருகிறது. மாநிலங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை நிதி ஆயோக் வசம் அளித்தால் அது மத்திய, மாநிலங்களுக்கிடையிலான கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதாக அமையும் என்றார்.