வேளாண் சட்டத்தை நல்லா புரிஞ்சிக்கோங்க.... விவசாயிகளுக்கு நிதின் கட்கரி அட்வைஸ்!
புதுடெல்லி: வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வழங்கும் நல்ல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க தயாராக உள்ளது எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே சிறந்த வழி என்றும் விவசாயிகளுக்காக மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செய்லபடுகிறது எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த திட்டத்தை வாபஸ் பெரும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
தொடர் போராட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் இருப்பது நாளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து உள்ளது. விவசாயிகளுக்கு இந்தியா மட்டும் அன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல் பெருகி வருகிறது.
விவசாயிகள் உறுதி
பல்வேறு வெளிநாடுகளில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் பல விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்து உள்ளார். ஆனாலும் வேளாண் சட்டத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. வேளாண் சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.
அநீதி ஏற்படாது
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் வேளாண் சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக நிதின் கட்கரி கூறியதாவது:-மத்திய அரசு விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது . விவசாயிகள் வழங்கும் நல்ல பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது. மத்திய அரசால் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது.
நல்ல மருந்து
சிலர் இந்த போராட்டத்தை தவறாக பயன்படுத்தி விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி செய்து வருகின்றனர். இது மிகவும் தவாறாகும்.விவசாயிகள் மூன்று சட்டங்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பேச்சுவார்த்தைதான் சிறந்த வழி. பேச்சுவார்த்தை இல்லாவிட்டால் விவசாயிகளுடன் தவறான தகவல்தொடர்புக்கு வழிவகுக்கும், சர்ச்சை மற்றும் தூண்டுதலுக்கு வழிவகுக்கும். பேச்சுவார்த்தைகள் இருந்ததால்தான் பிரச்சினைகள் தீர்க்கப்படும், முழு விஷயமும் முடிவடையும். விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
விலையை தீர்மானிப்பது யார்?
நீங்கள் ஒரு மருந்தகத்திற்குச் சென்றால் மருந்தின் விலையை யார் தீர்மானிக்கிறார்? மருந்து கடைக்காரரா? அல்லது மருந்து தயாரிக்கும் நிறுவனமா? உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு செல்கிறீர்கள். அந்த உணவை தயாரிக்கும் ஓட்டல் உரிமையாளர் தானே உணவின் விலையை தீர்மானிக்கிறார்.
பயன் பெறுகிறார்கள்
விமானத்தில் பயணம் செய்யும் போது டிக்கெட்டின் விலையை தீர்மானிப்பது யார்? அந்த விமானத்தை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனம். ஆனால் பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிர் உற்பத்தி செலவை ஏன் தீர்மானிக்க முடிவதில்லை. விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பயிர்களை கொண்டு சந்தைகளுக்கு செல்லும்பொது இடைத்தரகர்கள் அல்லது வணிகர்கள் அதன் விலையை தீர்மானிக்கிறார்கள். இது சரியான முறையா?
ஆறு மடங்கு அதிகரிப்பு
வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்து கொள்ள முடியும். இது அவர்களின் உரிமை. கடந்த ஆறு ஆண்டுகளில் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) ஆறு மடங்கு அதிகரித்தோம். விவசாயிகளின் நலனுக்காக கடந்த 50 ஆண்டுகளில் செய்யாத பணிகளை ஆறு ஆண்டுகளில் செய்து உள்ளோம். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.