2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராகும் நிதிஷ்? ராகுல் உடனான சந்திப்புக்கு பின் அவரே சொன்ன பரபர தகவல்
டெல்லி: ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்த நிதிஷ்குமார், 2024 மக்களவை தேர்தலில் தனது திட்டங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சியை அமைத்தார்.
இது பாஜகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சிலர் இது 2024 மக்களைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கான தொடக்கம் என்றும் கூறி வருகின்றனர்.
மோடிக்கு பிடிக்காத “ஒரே வார்த்தை”..குஜராத்தில் வாக்குறுதியை அள்ளிவீசிய ராகுல் காந்தி! தேர்தல் வருதுல
ராகுல் உடன் சந்திப்பு
பாஜக உடனான கூட்டணியை முறித்துள்ள நிலையில், 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்னிறுத்தப்படலாம் என்றும் கூட சிலர் கூறுகின்றனர். இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக இன்று டெல்லி சென்ற நிதிஷ்குமார் காங்கிரஸின் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் வேட்பாளர்
செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "பிராந்தியக் கட்சிகளைப் பலவீனமாக்கச் சிலர் முயன்று வருகின்றனர். அதை முறியடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது நோக்கம். அதேநேரம் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்க எனக்கு எவ்வித ஆர்வமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி
ராகுல் காந்தி மட்டுமின்றி அவர் பல முக்கிய தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அவர்களில் முதன்மையானவர் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால். ஏனென்றால், கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்திலேயே பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணியில் அவரை இணைக்க முயற்சிகள் நடைபெற்றன. இருப்பினும், அது வெற்றியடையவில்லை,
முக்கிய தலைவர்கள்
அதேபோல கர்நாடகாவில் எச்டி குமாரசாமியையும் அவர் விரைவில் சந்திக்க உள்ளார். குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கர்நாடக அரசு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவியதால் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2019 தேர்தலிலேயே பாஜகவுக்கு எதிராக ஓரணியை உருவாக்க முயன்ற தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு கடும் போட்டி கொடுத்த அகிலேஷ் யாதவையும் அவர் நேரில் சென்று சந்திக்க உள்ளார்.
பயணம்
இதற்காக 'Mission Opposition' என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ள அவர், விரைவில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ளார். இவரது பயணம் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வர உதவுமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.