டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்க தடையா? அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க தடை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி திடீரென தொலைக்காட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார். அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த 500, ரூபாய் 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. கையில் இருந்த 500,1000 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் தடுமாறிய மக்கள், வங்கிகள் முன் திரண்டனர். இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் அந்த பணத்தை எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் இருந்ததால் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அதன்பிறகு படிப்படியாக நிலை சீரானது. இதனிடையே, சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து மறைந்து வந்தது. சாதாரணமாக 2,000 ரூபாய் நோட்டைப் பார்ப்பதே அரிதாக மாறியது.

இந்த நிலையில் தான் நேற்று இரவு ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நிலை வந்துள்ளது.
இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று
ஊழியர்களுக்கு டாஸ்மாக் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவேடாஸ்மாக்கிற்கு மதுபானம் வாங்க வருபவர்களிடம் ரூ. 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்க தடை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். ரூ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications