எல்லை மோதல்: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டம் இல்லை- அமெரிக்கா திட்டவட்டம்
டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தத்துக்கு அமெரிக்கா தயார் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 முறை தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அரசு இதனை திட்ட வட்டமாக நிராகரித்துவிட்டது.
இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையில் 3-வது நாட்டின் தலையீட்டை அனுமதிப்பது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. இந்த நிலையில் லடாக்கின் கிழக்கில் அத்துமீறி சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீனா தரப்பில் 43 பேர் பலியாகினர். 1975-ம் ஆண்டு இந்தியா- சீனா யுத்தத்துக்குப் பின்னர் இருநாடுகளிடையே நிகழ்ந்த மிகப் பெரும் மோதல். ஆகையால் உலக நாடுகள் இந்த மோதல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இந்தியாவுடன் மோதல்- சீனா ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்திக்கிறார் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ
இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் மெக்கெனானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா -சீனா மோதல் தொடர்பான கேள்விக்கு மெக்கெனானி அளித்த பதில்:
Recommended Video
இந்தியா-சீனா மோதல் நிலைமை, உயிரிழப்புகள் குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் நன்கு அறிவார். இந்த நிலைமைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த ஜூன் 2-ந் தேதியன்று இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப், தொலைபேசியில் உரையாடினார். அப்போது சீனாவுடனான எல்லை பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை . இவ்வாறு மெக்கெனானி கூறினார்.