தாஜ் மஹால் கோயில் நிலத்திலும் இல்லை.. அங்கு கடவுளும் இல்லை.. ஆர்டிஐ கேள்விக்கு தொல்லியல் துறை பதில்!
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் அடித்தளத்தில் இந்துக் கடவுள்களின் சிலைகள் எதுவும் இல்லை என்று இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், இந்து கோயிலின் நிலத்தின் மீது கட்டப்பட்டிருக்கலாம் என பல காலமாகவே சர்ச்சைக்குரிய கருத்து பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா கோயில் என்று வர்ணித்து, அதன் அடித்தளத்தில் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக இந்து அமைப்புகள் கூறி வந்தன.
இதனிடையே அயோத்தியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர், தாஜ் மஹால் அடித்தளத்தை திறக்கக் கோரி லக்னோ உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே கடந்த ஜூன் 3ம் தேதி, ஷாஹி இத்கா மஸ்ஜித் - ஸ்ரீ கிருஷ்ணா ஜென்ம பூமி வழக்கின் மனுதாரர்கள் தரப்பில், தாஜ் மஹாலின் அடித்தளத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறும் இந்து தெய்வங்களின் சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மத்திய அரசுக்கும், தொல்லியல் ஆராய்ச்சி துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகேத் கோக்லே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், தாஜ்மஹால் குறித்த தகவல்களை கோரியிருந்தார். இவரின் கேள்விகளுக்கு பதிலளித்த மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மகேஷ் சந்த் மீனா, " தாஜ் மஹால் கோயில் நிலத்தில் இல்லை. எந்த விதமான கடவுள்களின் சிலைகளும் அடித்தளத்தில் இல்லை" என கூறியுள்ளார்.
இதன் மூலம் தாஜ்மஹால் கோயில் நிலத்தில் கட்டப்படவில்லை என்றும், பூட்டப்பட்ட 20 அறைகளில் எவ்வித கடவுள்களின் சிலைகளும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் நீண்ட காலமாக செவி வழியாக பரப்பப்பட்டு வந்த சர்ச்சைக்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆக்ரா சுற்றுலா சங்கத் தலைவர் ப்ரஹலாத் பிரசாத் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது. தற்போது சுற்றுலாத்துறை கொஞ்சம் எழுச்சி பெற தொடங்கியுள்ள சூழலில், இப்படி சர்ச்சைகளை ஏற்படுத்துவது தாஜ்மஹாலுக்கு மட்டும் பாதிப்பைத் தராது. ஆக்ரா மற்றும் மொத்த நாடு குறித்த அபிப்ராயத்தையும் பாதிக்கும். இதுபோன்ற விவகாரங்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.