ராகுலிடம் விசாரணை.. யாரும் ராணியோ, இளவரசரோ அல்ல.. காங்கிரஸை சீண்டும் பாஜக..!
டெல்லி: இங்கிலாந்தைப் போல் இந்தியாவில் யாரும் இங்கு ராணியாகவோ, இளவரசராகவோ இல்லை என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குறித்து பாஜக விமர்சித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பத்திரிகை இழப்பை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது.
இருந்தும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டு 2010 ஆம் ஆண்டு அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இதில் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்நிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு 4ஆவது முறையாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்களாக 30 மணி நேரத்துக்கும் மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இதனைக் கண்டித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறையினர் விசாரணை அரசியல் பழிவாங்கும் நடடிக்கை என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருவது குறித்து பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், இங்கிலாந்து போல் இந்தியாவில் யாரும் ராணியோ, இளவரசரோ கிடையாது, சட்டத்தின் முன் இங்கு அனைவருமே சமம்தான். ஊழலுக்கு எதிராக யாரையும் விசாரிக்கலாம். நேஷனல் ஹெரால்டு வழக்கில், நாட்டின் பணம் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பதும், அதில் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பது குறித்தும் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை என்றால் என்ன என்பதை ராகுல் காந்தி தெரிந்துகொள்ள வேண்டும். அது ஒன்றும் உரிமைக் கோரிக்கை அமைப்பு அல்ல. தாங்கள் மிகப்பெரிய குடும்பம், எங்களை எப்படி விசாரணைக்கு அழைக்கலாம் என்று ராகுல் காந்தி கேட்கிறார். ஆனால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications