வாக்குகளை எதிர்பார்க்காதீர்கள்.. முதலில் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசுங்கள்.. விவசாய சங்க தலைவர்
டெல்லி: போராட்டத்தை ஆதரிப்பதாலேயே விவசாயிகள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்குப் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்திய விவசாய சட்டங்கள், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் இரண்டு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போராட்ட களத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வாக்குகளை எதிர்பார்க்காதீர்கள்
இந்நிலையில், காசிப்பூரில் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "எதிர்க்கட்சிகளுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் மீதான அனுதாபத்தால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கலாம். ஆனால், இதற்காகப் போராடுபவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கக் கூடாது. இது ஒன்றும் அவர்கள் போராட்டம் இல்லை" என்றார்.

பேச்சுவார்த்தை தொடர வேண்டும்
எதிர்க்கட்சிகள் எங்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றும் அரசு தங்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடரும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, நேற்று பேசிய விவசாய தலைவர்கள், அழுத்தத்தில் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சுமார் 1.5 ஆண்டுகள் விவசாய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாராகா உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், விவசாய சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

டிராக்டர் பேரணியில் குழப்பம்
விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், அப்போது திடீரென்று அதில் குழப்பம் ஏற்பட்டது. இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளை டெல்லி போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications