படார்னு சத்தம்.. விஷ வாயுவா இருந்தா என்ன செய்வது.. அவமானம்.. காங்கிரஸ் எம்பிக்கள் சாடல்
டெல்லி: பலத்த செக்யூரிட்டிகளையும் தாண்டி இரண்டு பேர் லோக்சபாவில் தாவி குதித்து தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.பிக்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது அவமானகரமான விசயம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று லோக்சபா நடந்துகொண்டிருக்கும்போது, பார்வையாளர்கள் பகுதியிலிருந்து இருவர் திடீரென, எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, அத்துமீறிக் குதித்தவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிடித்தனர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே இருவர் மஞ்சள் நிற புகை வெளிவரும் வகையிலான குண்டுகளைப் பயன்படுத்தினர். அப்போது அவர்கள் பாரத் மாத கி ஜே என்று முழக்கமிட்டனர்.
ஒரு பெண் உட்பட நான்கு பேரைக் கைதுசெய்திருக்கும் காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த போது அவையில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா இல்லை. அதே நேரத்தில் ராகுல்காந்தி சற்று நேரத்திற்கு முன்புதான் அவைக்குள் வந்து அமர்ந்ததார். சற்று நேரத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக, எம்.பிக்கள் பலரும் தங்கள் கருத்தை கூறியுள்ளனர். காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், லோக்சபாவில் பாதுகாப்புக் குறைபாடு நிலவுகிறது. திடீரென்று 20 வயதுடைய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபைக்குள் குதித்தார்கள். அவர்களின் கையில் குப்பிகளை வைத்திருந்தனர். அந்தக் குப்பிகள் மஞ்சள் புகையை வெளியிட்டன.
அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். மேலும் சில கோஷங்களையும் எழுப்பினார். அவர் வெளியிட்ட புகை விஷ வாயுவாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன். 2001 ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட இதே நாளில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, மத்திய அரசின் பாதுகாப்பு குளறுபடியையே நிரூபிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நடந்த சம்பவத்தை விவரித்த திருநாவுக்கரசர் எம்.பி. இரண்டு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து குதித்தனர். படார் என்று சத்தம் கேட்டது. நாங்கள் சுதாரிப்பதற்கு முன்பாக அவர்கள் தாவி தாவி வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் புகைக்குண்டுகள்போல எதையோ வைத்திருந்தனர். அதிலிருந்து மஞ்சள் நிறப் புகை வெளியேறியது. எம்.பிக்களால் பிடிக்கப்பட்ட அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறலாகும் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது அவமானம் என்றும் திருநாவுக்கரசர் எம்.பி கூறினார். நாடாளுமன்றத்தில் நடந்த இந்தச் சம்பவம், சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பா.ஜ.கவுக்கு தகுதி இல்லை என்பதைக் காட்டுகிறது. ஏற்கெனவே, அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. தற்போது அனைத்து பாதுகாப்பையும் தாண்டி, லோக்சபாவிற்குள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications