12 மாநிலங்கள்.. 94 தொகுதிகள்! 3ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்
டெல்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், மே 7ம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முதல்கட்ட தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளுக்கான 3ம் கட்ட தேர்தல் மே 7ம் தேதி தொடங்குகிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மே 7ம் தேதி மூன்றாவது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி ஏப்.19ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 22ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 22 மாநிலங்களில் உ.பி, குஜராத், பீகார், மகாராஷ்டிரா என பல முக்கிய மாநிலங்கள் வருவதால், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரைக்கு தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் எப்படியும் 400 தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜக கூறி வந்த நிலையில், தற்போது இது 375 ஆக குறைந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
பாஜகவை பொறுத்த வரையில், 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா வருவதால் அதனை சிறப்பாக கொண்டாட கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியமாகும். அதேநேரம், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நேருவுக்கு பின்னர் 3வது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை பெறுவார். எனவே இந்த இரண்டு வகையில் இந்த தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
அதேபோல கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் கட்சியின் தலைவர்கள் பலர், காணாமல் போயுள்ளனர். இதில் பலர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். எனவே கட்சியை காப்பாற்ற இந்த தேர்தல் காங்கிரசுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த தேர்தல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.












Click it and Unblock the Notifications