எல்லா வழக்கையும் சிபிஐக்கு மாற்றக்கூடாது.. உச்சநீதிமன்ற நீதிபதி ஜேகே மகேஸ்வரி அமர்வு உத்தரவு
டெல்லி: விஜய்யின் கரூர் கூட்ட நெரிசல் வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜேகே மகேஸ்வரி, எல்லா வழக்கையும் சிபிஐக்கு மாற்றக்கூடாது என மற்றொரு வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளார். எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடக்கூடாது. விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார்.
உத்தரப் பிரதேச சட்ட மேலவை மற்றும் சட்டமன்றச் செயலகங்களில் ஆட்சேர்ப்பு நடைபெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெற்ற நிலையில், இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்ட மேலவை தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்ணோய் ஆகியோரின் அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் கூறியதாவது:-
அப்போது உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடக்கூடாது. விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய
"சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் தீர்ப்பு, இறுதி முயற்சியாகவே கருதப்பட வேண்டும். நீதி செயல்முறையின் ஒருமைப்பாடு சமரசம் செய்யப்பட்டுள்ளது அல்லது சமரசம் செய்யப்படலாம் என்று நீதிமன்றம் உறுதியாக நம்பும் போதிலும் மட்டுமே சிபிஐக்கு உத்தரவிடுவது நியாயமாகும்.
நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யவே இவ்வாறு செய்யலாம். அல்லது குற்றச்சாட்டுகளின் சிக்கலான தன்மை, நுட்பமான வழக்குகளில் மத்திய ஏஜென்சியின் நிபுணத்துவம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மாற்றலாம்" என்று தெரிவித்தார்.
கரூர் வழக்கை விசாரித்த நீதிபதி
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அஸ்ரா கர்க் தலைமையிலான எஸ்ஐடி விசாரித்தது. இதற்கு எதிராக தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கையும் நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழுவையும் அமைத்தது.
முக்கியமாக, மூன்று நாட்களுக்கு முன்பு கரூர் வழக்கில் சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி அமர்வு, தற்போது "எல்லா வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றக்கூடாது" எனக் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
தீர்ப்பில் கூறியது என்ன
கரூர் வழக்கை நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா ஆகியோர் விசாரித்தனர். அவர்களது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"குற்றவியல் நீதிநடையில் புலனாய்வு மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை மீட்கவேண்டும். இதுபோன்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் புலனாய்வு முழுமையாக சுதந்திரமாகவும், பாரபட்சமற்றதாகவும் இருப்பதை உறுதி செய்யவேண்டும். காரணம், இந்த சம்பவம் மக்களின் அடிப்படை உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. எனவே, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை அவசியமாகிறது."












Click it and Unblock the Notifications