டெல்லி அரசியலிலிருந்து ஒதுங்கும் கெஜ்ரிவால்? அதிஷிக்கு போன மிக முக்கிய பதவி! ஆம் ஆத்மியில் சலசலப்பு
டெல்லி: டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது. இதற்கிடையே அங்கு அதிஷிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் இப்போது பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதிஷிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாகவே ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தது. அதில் சுமார் 9 ஆண்டுகள் கெஜ்ரிவால் தான் முதல்வராக இருந்தார். அவரது தலைமையிலேயே ஆம் ஆத்மி தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கெஜ்ரிவால்
அதற்கேற்ப மதுபான கொள்கை வழக்கில் கைதான போதும் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியில் இருந்து விலகவில்லை. ஆனால், மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கிடைத்தவுடன் டெல்லி அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிஷி முதல்வராகப் பதவியேற்றார். அவரது தலைமையில் டெல்லி அரசு செயல்படத் தொடங்கியது.
இந்தச் சூழலில் நடந்த டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது. அங்கு சுமார் 20+ ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்தது. கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய ஆம் ஆத்மி தலைவர்களும் கூட தோல்வி அடைந்தனர். டெல்லி முதல்வராக இருந்த அதிஷி உள்ளிட்ட சில ஆம் ஆத்மி தலைவர்கள் மட்டுமே தேர்தலில் வென்றனர்.
ஆம் ஆத்மியில் சலசலப்பு
இது ஒரு பக்கம் இருக்க கெஜ்ரிவால் பஞ்சாப் அரசியல் களத்தில் நுழையப் போவதாகத் தகவல் வெளியானது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் உள்ள சூழலில், அவரை நீக்கிவிட்டு கெஜ்ரிவால் முதல்வராக உள்ளதாகக் கூறப்பட்டது. இதனை ஆம் ஆத்மி மறுத்த போதிலும், பஞ்சாப் களத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் கெஜ்ரிவால் வருகையைக் காட்டுவதாகவே இருக்கிறது.
இந்தச் சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் டெல்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி தேர்வாகியுள்ளார். டெல்லியில் முதல்வராக பாஜகவின் பெண் தலைவரான ரேகா குப்தா உள்ள நிலையில், மற்றொரு பெண் தலைவரான அதிஷி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வாகியுள்ளார். கெஜ்ரிவால் டெல்லி தேர்தலில் தோல்வி அடைந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
என்ன காரணம்
அதேநேரம் தேவை என்றால் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வாகலாம். அடுத்த 6 மாதங்களுக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்து, அதில் கெஜ்ரிவால் வென்றால் போதும், அவர் டெல்லி அரசியலில் தொடர்வார். ஆனால், டெல்லியில் இப்போது தான் பாஜக வென்று ஆட்சியை அமைத்துள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டாலும் வெல்வது உறுதி இல்லை என்பதாலேயே கெஜ்ரிவால் ரிஸ்க் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
ஒதுங்கும் கெஜ்ரிவால்
மேலும், ஆம் ஆத்மி வென்றிருந்தால் கூட கெஜ்ரிவால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் அர்த்தம் இருக்கிறது. என்னதான் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சருக்கு இணையானது என்றாலும் அதற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பது சரியாக இருக்காது என்றே கெஜ்ரிவால் கருதுகிறார். அதேநேரம் பஞ்சாப் ஆம் ஆத்மியிலும் குழப்பம் நிலவும் சூழலில், கெஜ்ரிவால் அதில் கவனம் செலுத்தலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது டெல்லி அரசியலில் இருந்து சற்று விலகும் கெஜ்ரிவால், கட்சியை வளர்த்தெடுக்க மீண்டும் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications