இந்தியாவிற்கு விரைந்த சிஐஏ.. இன்னொருபக்கம் ரஷ்ய அதிகாரியுடன் அஜித் தோவல் மீட்டிங்.. என்ன நடக்கிறது?
டெல்லி: அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின் தலைவரும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் அடுத்தடுத்து இந்தியாவிற்கு வந்து உள்ளனர். இவர்கள் அடுத்தடுத்து இந்தியாவில் உயர்மட்ட மீட்டிங்குகளை நடத்த உள்ளது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே இந்தியா கொஞ்சம் குழப்பமான நிலைபாட்டிலேயே இருக்கிறது. நேரடியாக தாலிபான்களை இன்னும் இந்தியா ஆதரிக்கவில்லை. தாலிபான்களை இதுவரை இந்தியா ஆதரித்தது கிடையாது என்பதால் இரண்டு தரப்பிற்கும் இடையில் கசப்பான உறவே உள்ளது.
தாலிபான்களுடன் இந்தியா நடத்திய தோஹா மீட்டிங்கும் கூட பெரிய அளவில் எந்த விதமான பலனும் அளிக்கவில்லை. தாலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா இதுவரை தாலிபான் அரசை ஆப்கானிஸ்தானில் அங்கீகரிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கில் கூட, ஆப்கான் எந்த நிலையிலும் மீண்டும் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று இந்தியா அறிவித்து இருந்தது.

இந்தியா நிலைப்பாடு?
தாலிபான்களும் இந்தியாவுடன் உறவு மேற்கொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. காஷ்மீர் விஷயத்தில் ஏற்கனவே தாலிபான்கள் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுத்து உள்ளது. தாலிபான் அமைப்பு என்பதே பாகிஸ்தானின் வளர்ப்பு பிள்ளைதான். அப்படி இருக்கும் போது காஷ்மீர் விவகாரத்தில் தாலிபான் இந்தியாவிற்கு ஆதரவாக பேச வாய்ப்புகளே இல்லை. இதனால் இந்தியாவும் தாலிபான் அரசை அங்கீகரிக்காமல் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தாலிபானும் தங்களின் பதவி ஏற்பு விழாவிற்கு அமெரிக்காவையும், இந்தியாவையும் புறக்கணிக்கும் முடிவில் உள்ளது.

சிஐஏ
ஆசிய நாடுகள் பல தாலிபான்களுடன் நெருக்கம் காட்டுகிறது. சீனா முதல் ஆளாக தாலிபானை அங்கீகரித்துவிட்டது. இது ஆசிய கண்டத்தில் இந்தியாவிற்கு ஒரு வித அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் இன்று இந்தியாவிற்கு வந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இன்று அவர் முக்கியமான ஆலோசனைகளை டெல்லியில் மேற்கொண்டார். தாலிபான்களின் ஆட்சி குறித்தும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இவர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர் என்று கூறப்படுகிறது.

மீட்டிங்
இந்த மீட்டிங்கில் என்ன ஆலோசனை செய்யப்பட்டது என்று முழு விபரம் வெளியாகவில்லை. ஒரு பக்கம் இந்த சந்திப்பு நடந்த நிலையில் இன்னொரு பக்கம் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் இயக்குனர் நிக்கோலாய் பாட்ருசேவ் இன்று அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் பிரதமர் மோடியுடனும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அஜித் தோவலுடன் இவர் நடத்திய சந்திப்பில் தாலிபான் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபான்
தாலிபான்களை அங்கீகரித்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யா தாலிபான்களுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யாவுடன் இந்தியா இந்த மீட்டிங்கை நடத்துகிறது. பொதுவாக அஜித் தோவல் மிக முக்கியமான பின்னணி, காரணம் இல்லை என்றால் எளிதாக மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள மாட்டார். சீனாவுடன் மோதல் இருந்த போதே கடைசி கட்டத்தில்தான் அஜித் தோவல் களமிறங்கி சீன அதிகாரிகளுடன் பேசினார். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அமெரிக்கா, ரஷ்யாவின் இரண்டு உயர் அதிகாரிகளை அஜித் தோவல் சந்தித்து இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில்
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் இயக்குனர் நிக்கோலாய் பாட்ருசேவ் அந்த நாட்டின் உயரிய பாதுகாப்பு அதிகாரி ஆவார். அவர் இந்தியாவிற்கு வந்து இருப்பதும், அஜித் தோவலுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்ததும் பல கேள்விகளை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி செப்டம்பர் 16ம் தேதி எஸ்சிஓ மீட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த ஷாங்காய் கோஆப்பரேஷன் மீட்டிங்கில் பிரதமர் மோடி தாலிபான் வெற்றி குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

மோடி மீட்டிங்
மேலும் பிரதமர் மோடி குவாட் ஆலோசனையில் செப்டம்பர் 24 கலந்து கொள்ள இருக்கிறார். அதோடு நாளை பிரிக்ஸ் ஆலோசனை கூட்டத்திலும் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். பிரிக்ஸ் மீட்டிங்கில் ரஷ்ய அதிபர் புடினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்கிறார்கள். இதில் தோவல் முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். இந்த நிலையில்தான் ரஷ்ய அதிகாரி மற்றும் அமெரிக்காவின் சிஐஏ அதிகாரி ஆகியோர் தோவலை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications