நீட் தேர்வு முறைகேடு எதிரொலி.. தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக மாற்றம்! புதிய தலைவர் யார்?
டெல்லி: நீட் தேர்வு முறைகேடு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு புகார்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. இதனால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

பீகாரில் நீட் தேர்வின் வினாத்தாள் லீக் ஆன விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து இருக்கிறது. இதற்காக பெரும் தொகை கைமாறி உள்ளதும் அம்பலமாகியுள்ளது.
நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 பேரை பீகார் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் இருந்து பீகாருக்கு வினாத்தாளை அனுப்பியதில் மூளையாகச் செயல்பட்டதாக ரவி அட்ரி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நீட் தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. 67 தேர்வர்கள், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் இப்படி நடந்ததில்லை. ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
நீட் முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வுகளை நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.

அவருக்குப் பதிலாக தேசிய தேர்வு முகமையின் தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ITPO) தலைவரான பிரதீப் சிங் கரோலாவுக்கு என்.டி.ஏ தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் தலைவராகச் செயல்பட்டு வந்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications